செவ்வாய், 27 டிசம்பர், 2016

அனுமன் ஜெயந்தி



அனுமன் ஜெயந்தி 

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல   புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது   தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே   உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.   எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால்   பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர்,   மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில்   திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம்   வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன்   கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என   சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும்,  வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில்  தொண்டரையே  தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த  பிறகு பெரிய கடலை  தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,.  எனவே இவர் தனது  பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.  சிவனும் விஷ்ணுவும்  விஸ்வரூபம் எடுத்திருந்தாலும்,  பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி  அருகில் உள்ள தெய்வச் செயல்புரம்  என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில்  அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு  சென்று

"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.  அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன் சாலீஸா   பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின்   அம்சமாக தோன்றியவர்.

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன்   லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன்   மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து   ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும்  பெருமாளையும்  சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை  நாம்  கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம்   பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி,   ஆராதிக்க வேண்டும்.

வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை   புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர்   ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது   செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி   வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள்   அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும்   சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை   ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல   கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும்  பிறந்தவர்  இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர  வேறு எதுவும்  அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக்   கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர்   வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய   முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து   லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம்   தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை. நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு   ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை   வரவேற்கிறேன்  என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன்   சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர்.   இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின்   அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக்   கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி   நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள்   போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை   வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி   ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று,  அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம்   உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை   செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது   மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த   நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும்   ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ   அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள்   பெறுவோம்.

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.

வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற   ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.   பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட   மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப்   பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது.  அதன் கீழ்   குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக   அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக  இருந்து  தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம   தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது. அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த   நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில்   உள்ளது.

ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர்   ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே   மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை   மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத்   திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர்,   ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து   ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.   இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம்   போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி   உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்õலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.   இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில்   உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய   கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால்,   இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில்   சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி  தருகிறார்.  இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர்   சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட   பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை   ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள்  கூறினர்.

வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த   நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு   அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம்   இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த   மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில்   உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில்   வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும்   வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது   திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்   அருள்பாலிக்கிறார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம்  பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி   உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில்   ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில்   அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75   அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன்.   அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி  அநுமநதி  என்றும் வழங்கலாயிற்று.

சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத்   தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும்   நிலவுகின்றது.

********************************************************************************




சொல்லின் செல்வன் என்று ராமரால் பாராட்டப்பட்ட அனுமன், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். இவரைத் துதிப்போருக்கு சகலவிதமான ஆனந்தங்களும் கைவரப்பெறும் என புராணங்கள் கூறுகின்றன. இதிகாசபுராணங்களில் இணையற்ற இடம்பெற்று இருக்கும் அனுமன், ஈரேழு பதினான்கு உலகிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்.

ராமாவதாரத்தின் போது அனைத்து தேவர்களும் பூமியில் வானரங்களாகப் பிறந்தனர் என்றும், சிவபெருமான் ராமனுக்கு உதவிபுரிவதற்காக அதிபராக்கிரமசாலியான அனுமனை அவதரிக்கச் செய்ததாகவும் ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதூர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற ஆஞ்சநேயர் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர்.

முழுமுதற்கடவுளான பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். காக்கும் கடவுளான திருமாலோ அலங்காரப்பிரியர். சொல்லின் செல்வன் அனுமனோ ஸ்தோத்திரப்பிரியர் ஆவார். ராமநாமத்தின் உயிர் உருவமான அவர் தமது செவிகளில் ராமநாமமே ஒலிக்க வேண்டும் என்று விரும்புவார்.

சிரஞ்சீவிஅனுமன் வாயுதேவனுக்கும், அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அன்றைய தினம் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினார். அதனால் துயருற்ற அவர் சிவபெருமானை நோக்கி தவம்புரிய, ஜோதிச்சுடரான சிவபெருமான் அவர் முன் தோன்றி, ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு, அவள் விரும்பியபடி ஒரு மகன் பிறப்பான். அந்த மகன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக சிறப்புற்று திகழ்வான்’ என்று கூறிவிட்டு மறைந்தார். அவ்வாறே அவர் மனைவிக்கு ஒரு மகள் பிறக்க, அவள் அஞ்சனை என அழைக்கப்பட்டாள். கேசரி என்னும் வானர வீரருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி ‘பெண்ணே! நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று, மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் வண்ணம் மகன்பிறப்பான்’ என்றார். பிறகு அஞ்சனை காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள்.

அவளது தவத்தைக் கண்டு வாயுதேவன் அதிசயித்தார். இதையடுத்து அவர், சிவசக்தி வடிவான கனி ஒன்றை அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அஞ்சனை அக்கனியை உண்டாள். சில தினங்களில் அவர் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப்போற்றி புகழும்’ என்றது.

இதைக் கேட்ட அஞ்சனை பெரிதும் மகிழ்ச்சி அடைந்தாள். அஞ்சனை தன் கணவர் கேசரியிடம் நடந்ததைக் கூறினாள். அஞ்சனையும், கேசரியும் மகன் பிறக்கும் நாளை எதிர்பார்த்து இருந்தனர்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனாதேவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார். வாயுபுத்திரன், மகாபவிஷ்டன், அர்ஜூனசகன் என்று பலபெயர்கள் உண்டு. 

வாயுதேவனின் அருளால் பிறந்ததால் காற்றைப் போல் எல்லா திசைகளிலும் திரியும் ஆற்றல் பெற்று இருந்தார். குழந்தை பருவத்திலேயே மலை சிகரங்களை தாண்டுவார். தன்னலமற்ற தொண்டர். தன்னிகரற்ற பிரம்மசாரி. எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் அவர் ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்தார்.

கடல் கடந்தார்

ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடந்தார். ராவணனின் இழிசெயல் பொறுக்காமல் இலங்காபுரியை எரித்தார். போர்க்களத்தில் வீழ்ந்த லட்சுமணனை காப்பாற்ற, சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த மலையை கொண்டு வந்தார். அகிராவணனை பாதாள லோகத்தில் சம்ஹாரம் செய்து ராம, லட்சுமணர்களை மீட்டு வந்தார். இருப்பினும் தமது அறிவையும், ஆற்றலையும் குறித்து அவர் ஒரு போதும் தற்பெருமை பாராட்டியதே இல்லை.

‘நான் ஸ்ரீராமனின் சாதாரண தூதன். அவரின் பணியைச் செய்வதற்காகவே நான் இங்கே வந்துள்ளேன். ஸ்ரீராமனின் கிருபையால் எனக்கு அச்சமே கிடையாது. நான் ராமனுக்கு தொண்டு செய்கையில் மரணமடைய நேர்ந்தால் அதை வரவேற்கிறேன்’ என்று ராவணினிடம் சொன்னவர். இதன் மூலம் அனுமானின் பணிவை உணர்ந்து கொள்ள முடியும்.

சுந்தர காண்டம்

ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில், ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.

சொல்லின் செல்வனான அனுமன் முதன்முதலில் ராமனை சந்தித்தபோது, ‘நீ யார்?’ என்று ராமன் கேட்டார். அதற்கு, ‘காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நாமமும் அனுமன்’ என்று தன் தந்தை, தாயின் பெயருடன், தன் பெயரையும் அடக்கமாக கூறுகிறார் அனுமன்.

இலங்கையில் அனுமன் சீதையை தேடி சென்ற நேரத்தில் அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு திடுக்கிட்டு ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்க கூறிய ராமபக்தன் நான். ராமர் விரைவில் வந்து சிறைமீட்டு செல்வார் என்று நயம்பட உரைத்து சீதையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார்.

ராம தொண்டை சிரத்தையுடன் செய்து வந்த, ஆஞ்சநேயரின் ஜெயந்தி விழா அன்று, விரதம் இருந்து ராமநாமம் பாடி அனுமானை வழிபட வேண்டும்.

விரதம் இருக்கும் முறை 

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். 

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம். 

அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசிஅன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமான் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும். 

காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி சேவிக்க வேண்டும்.

வெண்ணெய்  சாத்துவது  ஏன்?

வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.

வடை மாலை சாத்துவது  ஏன்? 

போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.

உடல்  முழுவதும்  செந்தூரம்

அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். இதை அருகில் இருந்து கவனித்த அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார்.  இதையடுத்து அனுமான் கருணைக்கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். 

இன்றும் அனுமான் கோவிலில் பூஜை செய்யும் பூசாரிகள் அனுமான் சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்திய பிறகு சிலைக்கு எண்ணெய் கலந்த செந்தூர பவுடரை பூசி விடுகின்றனர். பக்தர்களும் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்கி நலமுடன் வாழ செந்தூரத்தை நெற்றியில் பொட்டாக வைத்து கொள்கின்றனர்.

வெற்றிலையால் வாழ்த்திய சீதை

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கை அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது, ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து ‘ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டுச் செல்வார்’ என்று கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை, அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு ‘சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.
நன்றி-தினத்தந்தி,தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக