சனி, 29 ஜூன், 2019

அத்திவரதர்


#அத்திவரதர்

காஞ்சிபுரம் : கோவில்கள் நகரமான காஞ்சியில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில் ராஜகோபுரம், மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

மூலவரான வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். வேகவதி ஆறு, அனந்த புஷ்கரணி ஆகியவை தீர்த்தங்களாக உள்ளன. இந்த அனந்த புஷ்கரணியில் தான் அத்திவரதர் சயனித்தபடி அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், அழகியசிங்கர், சக்கரத்தாழ்வார், வலம்புரி விநாயகர், தன்வந்திரி, திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர், மலையாள நாச்சியார் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு, நாராயணனைத் தாங்கி நின்றமையால், இத்தலம், 'அத்திகிரி' என, அழைக்கப்படுகிறது. தங்க பல்லி தரிசனம் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.

அனந்த புஷ்கரணி அத்தி வரதர் :

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இப்போது, கோவில் இருக்குமிடம், ஒரு காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த மலையாக இருந்தது. அங்கு, பிரம்மன் யாகம் செய்தபோது, அதிலிருந்து அத்தி வரதர் தோன்றினார். அவரை, பிரம்மன் பூஜித்து வந்தார்.
காலப்போக்கில், அத்திகிரி வரதரை பூஜித்த அர்ச்சகர் ஒருவரது கனவில் வந்த அத்தி வரதர், யாக குண்டத்திலிருந்து வந்ததால், தன் உடல் எப்போதும் தகிப்பதாகவும், தன்னை நிரந்தரமாக புஷ்கரணியில் எழுந்தருளச் செய்யும்படியும் கூறியுள்ளார்.
புஷ்கரணியில் எழுந்தருளச் செய்தால், மூலவராக யாரை தரிசிப்பது என்று, அர்ச்சகர் வினவ, பழைய சீவரத்தில் உள்ள வரதரை பிரதிஷ்டை செய்து, பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை, 40 ஆண்டிற்கு ஒருமுறை வெளிக் கொண்டு வந்து, ஒரு மண்டல காலம் பூஜிக்கும் படியும் கட்டளையிட்டுள்ளார்.
அதன்படியே, அத்தி வரதரை, தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பெருமாள் எழுந்தருளியுள்ள அனந்த புஷ்கரணி, எப்போதும் வற்றியதில்லை.மேலும், ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று, வரதராஜப் பெருமாள், காஞ்சியிலிருந்து, பழைய சீவரத்திற்கு பாரிவேட்டை செல்வது, இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது.


வெள்ளையருக்கு பயந்து :

மேலும், வெள்ளையர்கள் ஆட்சியில், கோவில் சிலைகள் அனைத்தையும், அவர்கள் நாட்டிற்கு கடத்திச் சென்ற நிலையில், அத்தி வரதர் சிலையையும் நாடு கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில், அப்போது இதை ஆராதித்து வந்தவர்கள், பூமிக்கடியில் புதைத்திருந்தனர்.
பிற்காலத்தில், பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள். அவருக்கு, அதே இடத்தில் மண்டபம் கட்டி, பூஜித்ததாகவும் கூறப்படுகிறது.அந்த மண்டபத்தைச் சுற்றிலும், பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி, நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்து விட்டனர்.
நாற்பது ஆண்டிற்கு ஒருமுறை, அவரை வெளியே எடுத்து, ஒரு மண்டல காலத்திற்கு, அவரை பூஜித்ததாகவும், மீண்டும் அவரை தண்ணீருக்குள் வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது; அந்த வழக்கம் தொடர்கிறது.


வாழ்க்கையில் ஒருமுறை :

ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது இருமுறை தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும். கடந்த, 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில், அத்தி வரதர் தரிசன உற்சவம் நடந்தது.
இந்த நுாற்றாண்டில், இந்தாண்டில் முதன் முறையாக, ஜூலை, 1ம் தேதி, அனந்த தீர்த்தத்தில் இருந்து வெளியே வருகிறார். அத்தி வரதரை, வசந்த மண்டபத்தில், 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.
முதலில், சயனக் கோலத்திலும், பின், நின்ற கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனித்தபடி, அருள்பாலிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக