திங்கள், 25 செப்டம்பர், 2017

நாம்விளக்கு ஏற்றும் தீபத்தில் உள்ள வகைகளும், அதன் மகத்துவம் !!!*



நாம்விளக்கு ஏற்றும் தீபத்தில் உள்ள வகைகளும், அதன் மகத்துவம் !!!*

*காமாட்சி விளக்கு*

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன்  தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து  வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். புதுமனை புகும்  போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால் பக்தியுடன்  ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன்  மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து  விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.



*குத்து விளக்கு*

குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற  பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால்  அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன்  கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும்  விளங்குகின்றன.

*பாவை விளக்கு*

ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

*தீபங்கள் பதினாறு*

தூபம், தீபம், புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப  (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

*தூக்கு விளக்குகள் எட்டு*

1. வாடா விளக்கு
2. தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. சங்கிலித் தூக்கு விளக்கு
8. கிளித்தூக்கு விளக்கு.


*பூஜை விளக்குகள் ஒன்பது*

சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை  விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

*அஷ்டகஜ தீபங்கள் எட்டு*

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம் .

*தீபங்கள் ஏற்றும் இடங்கள்:*

வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக