வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கிருஷ்ணர் பற்றிய அரிய தகவல்கள்


கிருஷ்ணர் பற்றிய அரிய தகவல்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை ( 2ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ணர் பற்றி மிகவும் அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம் :

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பணமில்லாமல் பசுதானம் :

‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

துளசி மாலை அணிவது ஏன்? :

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

கோவிந்தா :

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும்.
எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

விஷ்ணுகிராந்தி :

வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி ‘விஷ்ணுகிராந்தி’ இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பஜகோவிந்தம் :

கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

கண்ணனின் ஆபரணங்கள் :

பெருமாள் சிலையை ‘திவ்ய மங்கள விக்ரகம்’ என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் ‘திருவபிடேகம்’ எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, ‘நூபுரம்’ என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்«ப, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

திரிபங்கி தோற்றம் :

கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு ‘திரிபங்கி’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை ‘திரிபங்கி லலிதாகாரன்’ என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.

16 ஆயிரம் மனைவிகள் :

ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

கோபியர் சேலைகளைக் கவர்தல் :

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

மயில் இறகு :

கிருஷ்ணனின் படங்களில் அவர் தலையில் மயில் இறகு சூடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் ஒரு தத்துவம் உள்ளது.
“கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு, சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே ‘ராதை’ ஆவாள். அவளைத் தலை மீது வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் இறகு மூலமாக அறிவிக்கின்றான் மாதவன்.

முகுந்தா... முகுந்தா :

“மு” என்றால் முக்தியை அருள்வது என்று பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.

சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

முதல் உறியடி திருவிழா :

கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர் ஒரு முறை கடுமையான வயிற்று வலியோடு தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர், வரகூரை அடைந்து, அங்கிருந்த வெங்கடேச பெருமாளை வழிபட்டதுமே அவருடைய வயிற்று வலி மாயமானதாம். இறைவனின் கருணையைப் போற்றி அவர் இயற்றிய இசைக் காவியம்தான் கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்தக் காவியத்துக்கு கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் தாளம்போட்டதாகவும், திரைக்குப் பின்னால் பெருமாள் நடனம் ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குதான் முதன் முதலாக உறியடி உற்சவத்தை நாராயண தீர்த்தர் தொடங்கி வைத்ததாகவும் சொல்வார்கள்.

சீடை, முறுக்கு ஏன்? :

பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

வசீகரிப்பவர் :

கிருஷ்ணா என்ற பெயரில் ‘கிருஷ்’ என்ப தற்கு அனை வரையும் வசீகரிப்பவன் என்று பொருள். (‘ணா’ என்பதற்கு பக்தி பரவசத்தை அளிப்பவன் என்று பொருள் அனை வரையும் வசீகரித்து பக்தி பரவசத்தை ஏற்படுத்துபவரே கிருஷ்ணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக