திங்கள், 1 அக்டோபர், 2018

சுடலை மாடசுவாமி


சுடலை மாடசுவாமி

சுடலை மாடன் ஒரு கிராம காவல் தெய்வம் ஆகும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை மாடன் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி ,
தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை மாடன் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு சில சுடலை மாட சுவாமிக் கோயில்களைத் தவிர மற்ற அனைத்துக் கோயில்களும் சாதரணமாகவே காணப்படுகின்றன.
பெரிய மண்டபங்களை மாடம் என கூறுவர்.பார்வதி கயிலாயத்தில் ஆயிரம் தூண்களை கொண்ட மண்டபத்தில் உள்ள தூண்விளக்கு சுடரில் பிறந்ததால் மாடன் எனவும் சுடலை என்பது உயிரற்ற உடலை குறிக்கும் மயானத்தில் எரிந்த பிணத்தை உண்டதால் சுடலைமாடன் என பெயர் பெற்றார்.காளை உருவம் எடுத்து பகவதியம்மன் கோயில் கோட்டையை சிதைத்ததால் இவர் காளையின் தலையுடனும் காட்சியளிப்பதுண்டு.
இந்த சுடலை மாடனுக்கு மூன்று விதமான பலிகள் தரப்படுகின்றன.
சீவலப்பேரி சுடலை மாடன் கோயில்,பாலாமடை கீழக்கரை சுடலை மாடன் கோவில்,நெல்லை மாவட்டம் தென்கலம்புதூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்திருக்கும் ஐகோர்ட் மகாராஜா கோவில், சிறுமளஞ்சி(ஏர்வாடி) சுடலை மாடன் கோயில், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊர்காடு(உய்காடு)சுடலை மாடன் கோயில், வள்ளியூர் அருகில் உள்ள கலந்தபனை உய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில்,நெல்லை மாவட்டம் பழவூர் எலந்தையடி சுடலை மாடன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிலவாகும்.
திருச்செந்தூரில் ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது. அதுபோல் சோனகன்விளையில் அமைந்திருக்கும் நாலாயிரமூட்டையார் குளக்கரையில் நாடார்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற சுடலைமாடசுவாமி ஆலையம் அமைந்திருக்கிறது.  நெல்லை மாவட்டம் நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது ,, நாகர்கோவில் நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர், சுசீந்திரம் அருகேயுள்ள தாணுமாலையன்புதூரில் அமைந்திருக்கும் சிவசுடலைமாடன் கோவிலின் சுடலைமாடன் சிலை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவமாக கல்லில் செதுக்கப்பட்ட பழமையான சுடலைமாடன் உருவச்சிலையாகும்.
தாணுமாலையன்புதூர் சிவசுடலைமாடன் சிலை

பிற பெயர்கள்
இவர் பலப் பெயர்களால் அறியப்படுகிறார் .
சுடலை ஈஸ்வரன்/சுடலேஸ்வரன்
பத்மாபரம ஈஸ்வரன்
மயாண்டீஸ்வரன்
சிவனைந்தபெருமாள்
சுடலையாண்டி
மாயாண்டி
சுடலைமுத்து
மாசானமுத்து
முத்துசுவாமி
வெள்ளைப்பாண்டி
ஸ்தலப்பெயர்கள்
சிவசுடலைமாடன்
மயான/மாசான சுடலைமாடன்
வேம்படி சுடலைமாடன் (ஐகோர்ட் மகாராஜா)
ஊசிக்காட்டு/ஊய்காட்டு சுடலைமாடன்
ஒத்தப்பனை சுடலைமாடன்
செம்பால் சுடலைமாடன்
எலந்தையடி சுடலைமாடன்
பிற அவதார பெயர்கள்
சத்திராதி முண்டன்
தளவாய் மாடன்
பலவேசக்காரன்
நல்ல மாடன்
அக்கினி மாடன்
செங்கிடாக்காரன்
கருங்கிடாக்காரன்
ஒற்றக்கொடைக்காரன்
இருளப்பன்
சந்தன மாடன்
பட்டாணி மாடன்
வன்னார மாடன்
புல மாடன்
களு மாடன்
சாமத்துரை பாண்டியன்
தேரடி மாடன்
சங்கிலி மாடன்
பன்றி மாடன்
குதிரை மாடன்
கரடி மாடன்
ஒற்றைபந்தக்காரன்
உண்டி மாடன்
சப்பாணி மாடன்
பொன் மாடன்
ஆலடி மாடன்
கரையடி மாடன்
இடக்கை மாடன்
பூக்குழி மாடன்
ஆகாச மாடன்
உதிர மாடன்
இசக்கி மாடன்
காளை மாடன்
சந்தயடி மாடன்
தூசி மாடன்
சிறுதெய்வ வழிபாடு
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சுடலைமாடன் கோயில்
கிராமங்களில் காவல் தெய்வங்களாகக் கருதப்படும் சுடலை மாடன், இசக்கி மாடன்,
புலமாடன், வேம்பன் , கருப்பசாமி ,
மாடசாமி, மாயாண்டி ,
முனியாண்டிபோன்ற ஆண் தெய்வங்களும், முப்பிடாரி , வண்டிமரிச்சி ,
காட்டேரி , உச்சிமாகாளி , இருளாயி,
முனியம்மாள் , இசக்கியம்மன் போன்ற பெண் தெய்வங்களும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளில் வணங்கப்பட்டு வருகிறது.
இத்தெய்வங்களின் கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. இக்கோவில்களில் சிலைகள் இருக்கும் தனி அறையான கருவறை என்கிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இல்லை. சாமியின் சிலையைத் தொட்டு வணங்கலாம். இத்தெய்வங்கள் பெரும்பாலும் மணல், சுண்ணாம்பு கலந்து திண்டுகளாக முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டிருக்கும். வெள்ளையடிக்கப்பட்ட திண்டுகளில் சாமிகளின் முகம் மட்டும் வரையப்பட்டிருக்கும் அல்லது காவிநிறக் கோடுகள் நீளவாக்கில் போடப்பட்டிருக்கும். சில ஊர்களில் கற்சிலைகளாகவும், சில ஊர்களில் சிலைகள் களி மண்ணாலோ சுண்ணாம்பாலோ உருவங்களாக உருவாக்கப்பட்டு வண்ணம் பூசி இருக்கும், கற்சிலைகளுக்கு வண்ணம் பூசப்படுவதில்லை. பிற இந்து தெய்வங்களைப் போல் கருணை வடிவான முகங்களாக இத்தெய்வங்களின் முகங்கள் அமைக்கப்படுவதில்லை.
ஆண்டுக்கொரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ இத்தெய்வங்களுக்கு சிறப்பு விழா 'கொடை விழா' என்கிற பெயரில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் ஆடு, பன்றி மற்றும் சேவல்களைப் பலியிட்டு அசைவ உணவு படைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
தோவாளை கஞ்சிப்பறை சுடலைமாடனுக்கு படைக்கப்பட்டிருக்கும் அசைவ படையல்
இக்கோயில்களின் கொடை விழாக்களின் பொழுது ஒரு சில பக்தர்கள் சாமியாடும் வழக்கம் இருக்கிறது. சாமியாடிகள் அல்லது சாமிகொண்டாடிகள் என்றழைக்கப்படும் அவர்கள் ஒரு சில குடும்பங்களிலிருந்தே பரம்பரையாகத் தேர்வு செய்யப்படும் வழக்கம் இன்னும் இருக்கிறது. இவர்கள் ஆவேசத்துடன் ஆட்டமிட்டுக் குறி சொல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சிலர் தங்களது குறைகளையோ அல்லது பொதுவான குறைகளைத் தெரிவித்து அதைத் தீர்க்க வழி கோருகின்றனர். சாமியாடுபவர்களும் அதற்கு பதில் அளிக்கின்றனர். இப்பதிலை தெய்வமே தெரிவித்ததாக நினைத்து அதன்படி நடக்கும் வழக்கம் கிராமப்பகுதிகளில் இன்னும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொடைவிழாக்களின் பொழுது தீப்பந்தம் ஏந்தி ஆடுவதும் நடுச்சாம வேளைகளில் சுடுகாட்டிற்கு சென்று வேட்டையாடுவதும் சுடலைமாடசுவாமியின் வழக்கமாகும். கணியான் கூத்து என்றழைக்கப்படும் மகுட கச்சேரி, தப்பட்டையுடன் கூடிய மேளம் ஆகிய இசை அமைப்புகள் சுடலைமாடசுவாமிக்கே உரித்தான இசையமைப்புக்களாகும்.
வாயில் மனித எலும்புகளை கடித்தபடி சுடுகாடு சென்று வேட்டையாடி திரும்பும் சாமியாடிகள்.
இக்கோவில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக