சனி, 12 அக்டோபர், 2019

கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை


கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறை!

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு என்றால் அழகு என்று பொருள். ஆகவே கொலு பொம்மைகளை பராமரிக்கும் முறைகளை பார்ப்போம்:

* பொம்மைகளை படிகளில் அடுக்கும் முன் முதலில் படிகளை நன்றாக சரி பார்க்கவும். அதுபோன்று படிகளை அலங்கரிக்கும் வேலைகளையும் முதலில் செய்துவிடவும்.

* பட்டுத் துணிகள், பாலிஸ்டர் போன்ற துணிகளை பயன்படுத்தாமல் படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

* மேல் படியில் இருந்து கொலு பொம்மைகளை அடுக்கிக் கொண்டு வரவும் .

* நவராத்திரி நாட்களில் பொம்மைகளுக்கு சாம்பிராணி புகைகளை அதிகம் காட்ட வேண்டாம்.

* தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிகளை சுற்றி தின்பண்டங்கள் எதுவும் சிந்திக் கிடக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

* கொலுவைப் பார்க்க வருபவர்கள் கொடுக்கும் பொம்மைகளை கீழே உள்ள இரண்டு படிகளில் வைக்கவும்.

* கொலு முடிந்த பிறகு இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்ளவும்.

* கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதி பெட்டியின் மேல் ஒட்டிவிட்டால் அடுத்தமுறை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

* பழைய பொம்மைகள் இருந்தால் தனியாக ஒரு பெட்டியில் கட்டி வைத்தால் அடுத்தமுறை எடுக்கும் போது வர்ணம் பூச ஏதுவாக இருக்கும்.

* கொலு பொம்மைகளை கட்டிவைக்கும் போது காட்டன் துணியிலோ அல்லது காகிதங்களிலோ சுற்றி வைக்கலாம். பாலிதின் கவரில் வைத்தால் பொம்மைகளின் நிறம் மங்கி காணப்படும்.

* பொம்மைகளை பெட்டிகளில் அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்க வைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்கக் கூடாது.
பொம்மைகள் முறையாக பராமரித்தால், பல தலைமுறைகள் வரை பாதுகாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக