புதன், 12 செப்டம்பர், 2018

கணக்கு சொன்ன பிள்ளையார்


கணக்கு சொன்ன பிள்ளையார்
----------------------------------------------

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் அருகே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கனக விநாயகர் அமைந்துள்ளார்.

ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின், தன் தந்தை ராஜராஜ சோழன் கட்டிய மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில்போல தானும் கட்டவேண்டுமென தீர்மானித்து அதற்கான திருப்பணிகளைத் துவக்கினான். அப்போது அனுதினமும் வழிபட அரண்மனைக்குமுன் இந்த கனக விநாயகர் கோவிலை அமைத்து, கோவிலுக்கு வடகிழக்கே பிரகதீஸ்வரர் கோவில் அமைக்கும் பணியை தன் அமைச்சரி டம் ஒப்படைத்தான்.

திருப்பணிகளுக்குத் தேவையான பொன்- பொருட்களை அரண்மனைக் கணக்கர் தினமும் அமைச்சரிடம் தருவார். அவற்றை அமைச்சர் இந்த கனக விநாயகர் திருமுன்வைத்து வணங்கியபின்பே ஆலயத் திருப்பணிகளை ஆரம்பிப்பார். (இந்த விநாயகருக்கு பால், எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது இவர் பச்சைநிற மேனியராகக் காட்சிதருவார்.) இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டுகள் அமைச்சர் தலைமையில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவந்தன.

ஒரு நாள் ஆலயத் திருப்பணிகளைப் பார்வையிட மன்னன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக்கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் அமைச்சரிடம், “”திருப்பணிக்கான செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கட்டளை இட்டுவிட்டுச் சென்றான் மன்னன்.

அமைச்சருக்குத் தூக்கிவாரிப் போட்டது. திருப்பணி செய்யும் மும்முரத்தில் அவர் கணக்கு ஏதும் எழுதவில்லை.

அமைச்சருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெய்வம்தான் தம்மைக் காக்க வேண்டுமென்று கனக விநாயகர் சந்நிதிக்கு ஓடோடி வந்தார். “”பெருமானே, மன்னர்
திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்டவேண்டும்” என கண்ணீர்மல்கி மனமுருகப் பிரார்த்தனை செய்துவிட்டு இல்லம் சென்றார்.

அன்றிரவு அமைச்சர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “”அமைச்சரே, வருந்தாதீர். இதுவரை எத்து நூல் எட்டு லட்சம் பொன் செலவானது என மன்னரிடம் கூறுங்கள்” என அருளி மறைந்தார். கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சந்நிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் “எத்து நூல் எட்டு லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டார்.

மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை எத்து நூல் என்பர். இதைக்கொண்டே கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் கல், மரம், மணல் எவ்வளவு வாங்கப்பட்டது என கணக்கிட்டுவிடலாம். எத்து நூல்தான் முக்கிய இடம் வகிக்கிறது.

மறுநாள் அமைச்சர் மன்னரிடம் விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். “”இவ்வளவு செலவானதென்றால் நாம் நினைத்தபடியே கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! அமைச்சரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டீர்கள்” என்று கேட்டான் மன்னன்.

நடந்த உண்மைகளை அமைச்சர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் கனக விநாயகர் சந்நிதிமுன் நின்று கண்ணீர் மல்க வணங்கினான். “”விநாயகப் பெருமானே தெரிவித்த கணக்கானதால் அது சரியாகத்தான் இருக்கும். இதன்மூலம் பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப விநாயகரே ஆசி வழங்கவிட்டார். எனவே இந்த கனக விநாயகர் இனிமேல் நமக்குக் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.

இந்த விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறிடத்திற்கு மாற்றிவிடக்கூடாதென்று எண்ணி, 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இவரின் சந்நிதிமுன் மிகச்சிறிய நுழைவாயிலைக் கட்டிவிட்டான். அந்நியர் படையெடுப்பு வந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருள்தான் காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக