வெள்ளி, 14 செப்டம்பர், 2018

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான வரலாறு இதோ.. தெரிந்துகொள்ளுங்கள்


விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதற்கான வரலாறு இதோ.. தெரிந்துகொள்ளுங்கள்

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
வெகுகாலத்தின் பின்னரே தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
இவ்விழா மீதான விமர்சனங்கள்
சன நெரிசலான நகரப்பகுதிகளில் இவ்விழாவின் முக்கிய கூறான விநாயகர் சிலைகளைக் கொண்டு செல்லும் ஊர்வலம் நடத்தப்படுவதால் மக்களின் அன்றாட நடமாட்டத்திற்கும் பணிகளுக்கும் ஊறு விளைவிக்கப்படுகிறது என்கிற கண்டனம் முன்வைக்கப்படுகிறது.இவ்விழாவின் ஊர்வலத்தை சிறுபான்மை, மாற்று மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாகத் திட்டமிட்டு கொண்டு செல்வதாகவும் இதன் மூலம் மத ரீதியான முறுகல்கள் ஏற்படக்கூடிய பதற்ற நிலையை வேண்டுமென்றே தோற்றுவிப்பதாகவும் ஒரு சாரார் விமர்சிக்கிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக