வியாழன், 16 ஜனவரி, 2020

தை முதல் வெள்ளிக்கிழமை... அம்மனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்..!


 தை முதல் வெள்ளிக்கிழமை... அம்மனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்..!

தை மாத வெள்ளிக்கிழமை வழிபாடு..!
🙏உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

🙏தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார்.

🙏ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள் ஆகும். அதனால்தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

🙏அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை ஆகும். தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள்யாவும் கிடைக்கும். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவது சிறப்பு.

🙏வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.

🙏எனவே, தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.

🙏தை வெள்ளியில் அம்மனை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். மேலும், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக