சனி, 1 பிப்ரவரி, 2020

நன்மையளிக்கும் அத்ரிமலைப் பயணம் !

நன்மையளிக்கும் அத்ரிமலைப் பயணம் !

மலை ஏறும் பக்தர்கள் கவனத்திற்கு

விரதம் எதுவும்பெரிதாக இருக்க வேண்டிய தேவை இல்லை.பயணத்திற்கு அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அசைவம் சாப்பிடாமல் சைவ உணவு மட்டும் சாப்பிடவும்.

தண்ணீர் பாட்டில் 1 அல்லது அதற்கு மேல் வைத்துக் கொள்ளலாம்.ஒன்று குடிப்பதற்கு, இன்னொன்று மலையில் உள்ள புனித தீர்த்தத்தில் நீர் பிடித்து வைத்துக் கொள்ள உதவும்.

அத்ரி மலையில் உள்ள புனித சுனையில் ஆண்டு முழுவதும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கும் தீர்த்த நீர் மிக சக்தி வாய்ந்தது.பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த நீரை எடுத்துச் செல்வார்கள். நீங்களும் தீர்த்தம் எடுத்துச் செல்ல விரும்பினால் அதற்கேற்ப 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் வாட்டர் கேன் கொண்டு வந்து எடுத்துச் செல்லலாம்.

45 நிமிடங்கள் முதல் 1:30 மணி நேரம் வரை மலை ஏற வேண்டி இருப்பதால் மலை ஏற முடியாதவர்கள்,வயதானவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் பயணத்தைத் தவிர்க்கவும்.


காலையில் அதிக வெயில் வரும் முன் மலை ஏறுவது நலன் முடிந்தவரை காலையில் சீக்கிரமே ஏற முயற்சிக்கவும்..

அத்ரி மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் குற்றாலம் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

அத்ரி மஹரிஷிக்கும்,அனுசூயாதேவிக்கும் மகனாக மும்மூர்த்திகளும் இணைந்த சொரூபமாக தத்தாத்ரேயர் அவதரித்தார்.

இந்தப் புனித மலையானது ஸ்ரீ அத்ரி மகரிஷி,அனுசூயாதேவி,கோரக்கர் முதலான சித்தர் பெருமக்கள் அருள் நிறைந்த ஸ்தலம்.

இந்த மலையையும், இதன் சிறப்பையும் பற்றிப் பல்வேறு சித்தர் நூல்கள் சிறப்பாகக் கூறுகின்றன.

கடனா நதி அணைக்கட்டும்,வருடம் முழுவதும் நீர்வரத்தும் கொண்ட பசுமையான மலை.

மலை ஏறும் வழியில் ஆறும்,அருவியும் உள்ளது.அங்கேயே குளித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் மேற்குப் பார்த்த படி அமைந்துள்ள சிவாலயங்களில் சிவசைலம் கோயிலும் ஒன்று.அத்ரிமலை செல்லும் வழியில் உள்ளது


மலைப் பயணம் முடிந்ததும் நேரம் இருந்தால் சிவசைலம் ஆலயத்திற்குச் செல்லலாம்.

அத்ரி மலையின் சிறப்புகள் :

இம்மலையில் அத்ரி முனிவர்,கோரக்கர்,பிருகு முனிவர் போன்ற சித்தர்கள் தவம் இயற்றியுள்ளார்கள்.

பசுமை போர்த்திய மூலிகை மலைகள், வானத்தையும், வனத்தையும் இணைக்கும் மேகக்கூட்டங்களை காண கண்கோடி வேண்டும். அத்ரிமலைஅடிவாரத்தில் கடனா அணை, ஜில்லென வீசும் பொதிகை மலைத்தென்றல், நாசி துவாரங்களை துளையிட்டு செல்லும் மூலிகை மனம்… என நற்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி – சம்பன்குளம் கடனா அணையை(85 அடி உயரம்) அடைய வேண்டும் அங்கிருந்து அணை வழியாக 7 கி.மீதுாரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். இடையே அத்ரி கங்கா நதியை கடக்க வேண்டும். வனத்தில் செல்லும்போது சித்தர்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளை காணலாம். இப்படி ஒவ்வொரு பகுதியாக கடந்து சென்ற பின் ‘அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி ஆசிரமம் (இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமானது) அமைந்துள்ளது.

தொடர்புடையவை:  ஒருவர் கூட விடுபடாமல் முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை
கோரக்க சித்தருக்காக அத்ரிமகரிஷி தோற்றுவித்த ‘கங்கா நதி ஊற்று’ இன்றளவும் தெளிந்த நீரோடையாக வற்றாத சுனை ஊற்றாக உள்ளது. இங்கு, அகத்தியர் கோரக்கர் இணைந்த கோயில் உள்ளது. இங்கு,சித்தர்கள் தியானம் செய்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்போது மன அமைதி, உள்ளத்தில் சாந்தி பிறக்கிறது’ என்பது நிதர்சனம்.

இந்தக் கோவிலின் முன்புறம் வனதுர்க்கை, வள்ளி,தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர், மகிஷாசுரமர்த்தினி, சுற்றுப்பாதையில் அகத்தியர், அத்ரி, நாக தேவதைகள், சாஸ்தா பீடம் அமைந்துள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கருவறையில் அத்ரி பரமேஸ்வரன், அத்ரி பரமேஸ்வரியும், எதிரில் நந்திதேவரும் வீற்றிருக்கின்றனர். கோவிலின் மேல்புறம் அத்ரி கங்கை தீர்த்த கட்டத்தில் கங்காதேவி எதிரில் நந்தி சிலை உள்ளது.

அத்ரி தபோவனத்தில் செய்யும் சிவ வழிபாடு கிரக தோஷங்களுக்கு சிறந்த பரிகாரமாகும். செவ்வாய் தோஷம் உடையவர்கள் சஷ்டியன்று விரதமிருந்து இங்கு முருகனை வழிபடுகின்றனர். இங்குள்ள நாக தெய்வங்களை வணங்கினால் நாகதோஷம் நீங்கும். ராகு,கேது தோஷத்திற்கு இந்த ஆலயம் சிறந்த பரிகார தலமாகும்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 6 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டுமே வனத்துறையினரின் அனுமதி உண்டு.இயற்கை அன்னையின் அரவணைப்பில் பிறந்த அத்ரி மலையின் அற்புதங்களை ஒருமுறையேனும் வந்து பாருங்களேன்!

அத்ரி மலை மற்றும் அருகில் உள்ள ஸ்தலங்கள் :

அத்ரி பரமேஸ்வரர் ஆலயம்

தவம் செய்யக் குகை போல் மாறி நிற்கும் மரம்

வற்றாத புண்ணிய தீர்த்தம்

அகத்தியர் மற்றும் அத்ரி மகரிஷி விக்கிரகம்

அத்ரி மலைத் தோற்றம் .
குகை

Thanks puthiyathisaigal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக