ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

மகா சிவராத்திரி ஸ்பெஷல்' சிவ வடிவங்கள் சிறப்பு தரிசனம்


மகா சிவராத்திரி ஸ்பெஷல்' சிவ வடிவங்கள் சிறப்பு தரிசனம்!

பொதுவாக சிவன் கோயில்களுக்குச் செல்லும் பலரும் வழிபாடு செய்துவிட்டு வந்துவிடுவார்கள். ஆனால். அங்கே அமைந்திருக்கும் பைரவர், சரபர், திரிபுராந்தகர், காலகாலர் போன்ற உருவங்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பார்கள். அவையும் சிவனின் வடிவங்கள் தான். அதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வோமா!

அர்த்தநாரீஸ்வரர்

சக்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஈசன் தன் உடலில் பாதியை உமையம்மைக்கு தந்தார். அதுவே அர்த்தநாரீஸ்வர வடிவம்.
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாக திகழ்கிறது. இது மட்டுமின்றி, வாழ்வியல் ரீதியாகவும் கூட, ஆணின்றி பெண்ணும், பெண்ணின்றி ஆணும் என்ற வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை விளக்கும் தத்துவமாகவும் திகழ்கிறது.

திரிபுராந்தகர்

கடுந்தவம் செய்து நான்முகனிடமிருந்து பொன் கோட்டை பெற்ற தாரகாட்சன், வெள்ளிக் கோட்டை பெற்ற கமலாட்சன், இரும்பு கோட்டை பெற்ற வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்களையும் அவர்தம் கோட்டைகளையும் அழித்த ஈசன் திரிபுராந்தகராகக் போற்றப்படுகிறார்.

பிட்சாடனர்

தாருகா வன முனிவர்களின் ஆணவத்தை அடக்கவும் அவர்கள் பத்தினிகளின் மன அடக்கமின்மையை உலகிற்குத் தெரியபடுத்தவும் ஈசன் மேற்கொண்டது பிட்சாடனர் திருக்கோலம்.

பைரவர்

பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமான இவர் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர். எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே.

 ரிஷபாரூடர்

அன்னை பார்வதியுடனும் விநாயகர், முருகப்பெருமானுடனும் ஈசன் புன்முறுவல் பூத்த வண்ணம் எருதில் ஏறி அருளும் திருவடிவம், ரிஷபாரூடர் எனப்படுகிறது.

வீரபத்திரர்

தன்னை மதிக்காமல் யாகம் செய்த தன் மாமனாரான தட்சப்பிரஜாபதியை அழித்த ஈசன் வீரபத்திரர் எனும் தட்ச சம்ஹாரமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.

திருக்கல்யான திருக்கோலம்

நிறைவாக மங்களகரமாக சிவனின் திருக்கோலத்தையும் சிற்ப வடிவில் தரிசித்து சிந்தை நிறைவோம்.  இந்த சிற்பங்கள் எல்லாம் இறையனூர் ஶ்ரீ ஆட்கொண்டநாதர் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக