செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சித்திரை திருநாளும்... திருவிழாக்களும்...


சித்திரை திருநாளும் திருவிழாக்களும்

 சித்திரை திருநாளும் திருவிழாக்களும்
சீர் மிகு சித்திரை, சிறப்புடைய சித்திரை, சிந்தை மகிழும் சித்திரை, பார்போற்றும் சித்திரை என சித்திரை மாதத்தின் பெருமைகளை அனைவரும் அறிவர். சித்திரை மாத பிறப்பை விஷீ புன்ய காலம் என்று அழைப்பர். அதாவது ராசி மண்டலத்தில் உள்ள முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் முதல் நாள் தமிழ் வருட பிறப்பு நாள். இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு பகுதியிலும் இம்மாத பிறப்பே அவர்களின் வருடபிறப்பாய் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆந்திராவில் யுகாதி, கேரளாவில் விஷீ, வடநாட்டில் பைசாகி என்றவாறு சித்திரை முதல்நாளே வருடபிறப்பாய் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் சித்திரை மாதம் வசந்த காலமாகவும், திருவிழா கோலமாகவும் திகழ்கிறது. சிறப்பு மிக்க சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிழாவும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். தமிழ் வருட பிறப்பாய் இவ்வாண்டு பிறப்பது 'துன்முகி' வருடம். இன்பமுடன் இளவேரிற் காலம் இனிதே தொடங்குகிறது. கரும்பு வில்லேந்தி மன்மதன் பானம் பொழிவும் பேரின்ப திருநாள். மாமரமும், வேப்பமரமும் பூத்து குழுங்கி வசந்தத்தை வரவேற்கும் உன்னத திருநாளே சித்திரை திருநாள்.

சித்திரை முதல்நாள் பஞ்சாங்கம் படிப்பது:

சித்திரையின் முதல் நாள் வீடுகளிலும், ஆலயங்களிலும் பஞ்சாங்கத்தை படிப்பார்கள். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை கொண்டது பஞ்சாங்கம். இப்பஞ்சாங்கத்தில் உள்ள திதியை அறிந்தால் திருமகள் அருளும், நட்சத்திரம் அறிந்தால் விணை நீக்கமும், அன்றைய யோகம் அறிவதால் நோயற்ற வாழ்வும், மரணம் அறிந்தால் காரிய சித்தியும் கண்டிப்பாய் கிட்டும். அதனை வருட முதல் நாளில் இருந்து அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தை வைத்து ஆரம்பித்திட வேண்டும்.
சித்திரை மாதத்தின் சீர்மிகு சிறப்புகள்:

பிரம்மன் உலகத்தினை படைத்தது சித்திரை முதல் நாள் தான். வேதம் கூறுகிறது.

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்டத்திலிருந்து பூமி வந்ததாய் புராணம் கூறுகிறது. அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது.
சித்திரை திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு ஆண்டின் முதல் அபிஷேகமாக வசந்தகால அபிஷேகம் நடைபெறும்.

கால புருஷனின் உடல் உறுப்புகளே வருடங்கள்:

சித்திரையில் மேஷ ராசியில் தொடங்கி கால புருஷன் இயங்குகிறான். மக்களின் பிறப்பு, இறப்பு வாழ்க்கை என அனைத்தையும் இயக்குபவன், ஆள்பவன் கால புருஷன்தான். ஆள்பதால் தான் ''ஆண்டு'' என்று பெயர் பெற்றதாம். அத்தகைய 12 மாதங்களை கொண்ட கால புருஷனின் உடல் உறுப்புகளாக 12 மாதங்களும் பாவிக்கப்படும். கால புருஷனின் தலை தான் சித்திரை மாதம். எனவே சித்திரையை ஆண்டு பிறப்பாக கொண்டாடுகிறோம்.

சித்திரை மாதத்தில் தான் ஆதிசங்கரர், இராமனுஜர் அவதரித்தனர். விஷ்னு மீனாக அவதாரம் எடுத்த மத்ஸ்ல ஜெயந்தி சித்திரை மாதம் திருதியை அன்று தான் சித்ர குப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்று தான்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும் திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி பட்டாபிஷேகம் என்றவாறு சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக கூடுவர். இத்தனை சிறப்பு மிக்க சித்திரை மாதத்தின் திருவிழாவும், கொண்டாட்டங்களை கணக்கிடவே முடியாது. ஆண்டு ஆரம்பமே திருவிழாவோடு தான் துவங்குகிறது.


Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக