புதன், 4 டிசம்பர், 2019

திருக்கார்த்திகை தீபம் அன்று திரு ஜோதி ஏற்றுவது யார்?


திருக்கார்த்திகை தீபம் அன்று திரு ஜோதி ஏற்றுவது யார்?
அந்த உரிமை எப்படி கிடைத்தது?
தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை
பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

திருவண்ணாமலை

.மெய்யுருக, விழியில் நீர்பெருக, உயிர் கசிந்துருக காணும் மெய்நிலையாம், அடி முடி காணாத அருட்பெரும் ஜோதியை தரிசிக்க முற்பிறவி பயன் வேண்டும்.

ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்!நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர்.

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

இறைஜோதியை ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு எப்படி கிடைத்தது?

பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர்.

அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.

கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவதராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

தற்போது அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றும் பருவதராஜகுல மரபைச் சேர்ந்த அடியார் கூறியது திருவண்ணாமலை தாமரைக்குளம் பகுதியில் வசிக்கும்  5 வழிமரபை சேர்ந்த குடும்பத்தினர், சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை செய்கிறோம்.

தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருப்போம். தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து,  மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் எங்களிடம் வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க எங்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டுசெல்வோம். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இடுவோம். அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிப்போம்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் நாங்கள் மகா தீபத்தை ஏற்றுவோம்.

மகா தீபத்தை ஏற்றும் அந்த நொடிப்பொழுது, நாங்கள் இறைவனின் திருவடியை பற்றியிருப்பதைப்போல உணர்வோம். எங்களுடய கண்களிலும் உணர்வுகளிலும் தீபம் மட்டுமே நிறைந்திருக்கும். ‘‘மகா தீபத்தை ஏற்றும் சுடரை, சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றுச்செல்லும் நாங்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம்.

திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருப்பாதத்தின் முன்பு ‘மூவுலகை காக்கும் ஈசனே, உமது திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது பயணிக்கிறோம். எங்களை மலை மீது அனுமதியும்’ என்று உளமாற பிரார்த்தித்துக்கொண்ட பிறகே எங்கள் பயணம் தொடரும்.

தீபம் ஏற்றும் போது, எங்கள் மரபைச் சேர்ந்தவர்கள் சிவபுராணம் பாடிக்கொண்டிருப்போம். சிவனுக்கு உகந்ததான சங்கொலி முழங்குவோம். மகா தீபம் மலை மீது தொடர்ந்து
11 நாட்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு நாளும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான கற்பூரம் மற்றும் திரியை நாங்கள் பெற்றுச்செல்வோம்.”

மகா தீபம் ஏற்றும்போது
மலை உச்சியில் முழங்கும் பாடல்
பருவத ராஜகுல மரபினர் மாமலை மீது மகா தீபம் ஏற்றும்போது,
 அவர்கள் சங்கொலி முழங்க அண்ணாமலையாரை போற்றி,
விண்ணதிர முழங்கும் பாடல் வரிகள்:

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஜோதியாய்
மலைமீது நிற்கும் அண்ணாமலை போற்றி..!
உண்ணாமுலை அம்பிகைக்கு இடபாகம் அளித்து

அர்த்தநாரீஸ்வரராய் நிற்கும் அண்ணாமலை போற்றி..!

எங்கும் எப்போதும் எல்லோரையும் கைவிடாமல்
காத்து அருள்புரியும் அண்ணாமலை போற்றி..!

ஞான தபோதனரை வாவென்று அழைத்து
வாழ்வளித்து காக்கும் அண்ணாமலை போற்றி..!

எங்கிருந்து நினைத்தாலும் நினைத்தபோதே

முக்திஅருளும் அண்ணாமலை போற்றி..!

மாலும் நான்முகனும் முயன்றும் அடி முடி
அறியாமல் நின்ற அண்ணாமலை போற்றி..!

ஓங்கி வளர்ந்து ஒளியாய் காட்சியளித்து
காத்தருள் புரியும் அண்ணாமலை போற்றி..!

வள்ளால ராஜாவுக்கு மகனாய் தோன்றி அண்ணலும்

அம்மையுமாய் காட்சி அளிக்கும் அண்ணாமலை போற்றி..!

புண்ணியம் ஒன்று செய்தால் பலவாக வெளிபட்டு
அருள்மழை பொழியும் அண்ணாமலை போற்றி..!

விட்டிடில் கஷ்டமாம் விட்டிடாது உனை

உயிர் விட்டிட அருள்புரி அண்ணாமலை போற்றி..!

தேவரும், அடியாரும் தொழும்போது
துணையாகும் அண்ணாமலை போற்றி..!

மலையாய் வடிவுகொண்ட மகேசன்
தீபமாய் எழுந்தருளும் அண்ணாமலை போற்றி..!

மலையுருவாய் சிவவுருவாய் எழுந்தருளி
எளியார்க்கு காட்சிதரும் அண்ணாமலை போற்றி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக