வெள்ளி, 10 மார்ச், 2017

மாசி மகம் சிறப்புகள்



மாசி மகம் சிறப்புகள் 

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.

கர்ண பரம்பரைக்கதை

முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.

இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.

ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.

மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,

இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.



மாசி மகம் : தோஷங்கள் போக்கும் மாசி மகம் ...

மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.

இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான  தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். இப்படி, முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும்  புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை  போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன்  செய்வது நன்மை தரும்.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பு. இந்த  நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து  கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர். தமிழகத்தை பொறுத்தவரை கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம்  கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

ஆண்டுதோறும் மாசி மகம் வந்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகா மகமாகும். அன் றைய தினம் பல லட்சம் பேர் மகாமக குளத்தில் நீராடுவர். மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. இந்நாளில் மாணவர்கள் தங்கள்  இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும். மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும்.  கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.

தேவாரம், திருவாசகம், காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள், ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், விஷ்ணு  புராணம் போன்ற புத்தகங்களை படிப்பது பலன் கொடுக்கும். நம் முன்னோர்கள் தாய், தந்தையர் ஆகியோரை நினைத்து அன்னதானம்,  ஆடைதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் சகல பாக்யங்களும்  ஏற்படும். வாடகை வீடு மாறவும் உகந்த நாள் இது.

மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகும். குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், அடிக்கடி கருச்சிதைவு ஏற்ப டுபவர்கள் மாசி மகத்தில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் தோஷம் நீங்கி, குழந்தை பாக்யம் கிட்டும். திருச்செந்தூரில் மாசி மகம்  மிகவும் பிரசித்தி பெற்றது. கடற்கரையில் முருகப் பெருமான் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா  கடற்கரையில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திரு ப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் என ஈசனும், பெருமாளும் ஒன்றுகூடி எழுந்தருளி அருள்பாலிப்பது மிகவும் விசேஷம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக