வியாழன், 21 ஜூன், 2018

திருநெல்வேலி ஆனிப்பெருந்தேர்த்திருவிழா திருத்தேர் சிறப்புக்கள்:


திருநெல்வேலி ஆனிப்பெருந்தேர்த்திருவிழா திருத்தேர் சிறப்புக்கள்:

*கி.பி.1906-1907 ம் ஆண்டில் வெளிவந்த திருநாவுக்கரசு என்ற பத்திரிகை செய்தியின் ஆதாரத்தின் அடிப்படையிலும்;1965-1966.இத்திருக்கோயில் நாட்காட்டியின் தகவலின் அடிப்படையிலும் உள்ள தகவல்கள் அடிப்படையில் கொல்லம் ஆண்டு 730.காளயுக்தி வருஷம்( கி.பி.1555 )வைகாசி மாதம் பெரிய கொடிமரம் பிரதிஷ்டை  செய்யப்பட்டதாகவும்;கொல்லம் 780 ம் (கி.பி.1605 ) ஆண்டு சவுமிய வருஷம் தை மாதம் திருப்பணி பண்டாரம் தருமம் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.**

1988.ம்வருடம் ஜுன் மாதம் 28.ம் தேதி வெளிவந்த தினமலர் நாளிதழில் "383.ஆண்டுகளாக பவனிவரும் நெல்லையப்பர்  -காந்திமதி திருத்தேர்" என்று தலைப்பு செய்தி வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*

திருநெல்வேலியின் நடுநாயகமாக அமைந்திருப்பது அருள்தரும் அன்னைகாந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு  சுவாமி நெல்லையப்பர்  திருக்கோயில். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. திருஞான சம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றது.


இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்களாகும்.

இதில் ஆனிப் பெருந்தேர்த்திருவிழா 45 நாட்கள் நடக்கும் மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா அன்னைபிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் தொடங்குகிறது. அதன்பிறகு பிள்ளையார் திருவிழா,முதலி மூவர்  சந்திரசேகர்-பவாணி அம்பாள் திருவிழா இவை முடிந்தவுடன் சுவாமி நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.

இத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.

4 ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதி உலா வருவர்.

8 ஆம் திருநாளில் இத்தலத்துக்குரிய மூர்த்தியான கங்காள நாதர் எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் பிட்சாடனர் என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

9 ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித்தேர்த்திருவிழா தேரோட்டம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.

இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் சுவாமி நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

நெல்லைத் தேர் கி.பி.1605இல் செய்யப்பட்டு இன்று வரை தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

1947 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது என்று கூறுகிறார்கள்.இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு, 450 டன் எடையுள்ள 28 அடி அகலமும்,28 அடி நீளமும்,35 அடி உயரமும்    அலங்காரம் செய்தபின் 80 அடி உயரமும் கொண்டு  தமிழகத்திலேயே 3 வது அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.
சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் மேற்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.

சிறப்புமிக்க திருநெல்வேலி ஆனித்தேர் திருவிழா 27.6.2018.அன்று காண அன்புடன் அழைக்கும்:  என்றென்றும் இறைபணியில் ஆன்மிகச் சோலை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக