செவ்வாய், 26 ஜூன், 2018

திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புகள்


திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புகள்

  • திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புக்கள்* :
"திருநெல்வேலி"யின் நடுநாயகமாக அமைந்திருப்பது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில். *இக்கோவில் சுமார் 1500ஆண்டுகள் பழைமையானது. திருஞானசம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றதலம்*.
  • இக்கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும்* முக்கியமான திருவிழாக்களாகும்.
இதில் *ஆனிப் பெருந்திருவிழா 45 நாட்கள் நடக்கும்* மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா *பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில்* தொடங்குகிறது. மூத்த பிள்ளையார் திருவிழா, நால்வர் திருவிழா இவை முடிந்தவுடன் நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.
இத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.
  • 4ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதிஉலா வருவர்*.
  • 8ஆம் திருநாளில்* இத்தலத்துக்குரிய மூர்த்தியான *கங்காளநாதர்* எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் *பிட்சாடனர்* என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.
  • 9ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித்தேரோட்டம்* என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.
இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.
திருவாரூர் தேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் சென்ற நூற்றாண்டில்தான் செய்யப்பட்டன.
  • நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது*.
1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
       
*இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்*.
*4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.
*முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்
            *சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.
            *வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.
                    *  தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக