திங்கள், 12 ஆகஸ்ட், 2019

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு



திருக்கயிலாயத்தில் மிக அற்புதமாக நடந்தேறியது ஒரு நிகழ்வு. `மிகப் பெரியவர் யார்... சிவனா, திருமாலா?' இந்தப் பேத புத்தி இல்லாமல், இந்தச் சக்திகள் இரண்டும் ஒன்றே என்று உலகுக்கு உணர்த்த  விரும்பினாள் அன்னை உமையவள். அதன் பொருட்டு சிவனாரை அணுகினாள்.

``ஸ்வாமி! தாங்களும்  ஸ்ரீநாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தியிருக்கும் திருக் கோலத்தைக் காட்டியருள வேண்டும்!’’ என வேண்டினாள். சிவனாரும் ஒப்புக்கொண்டார்.

‘`தேவி! பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகிலுள்ள `புன்னை வனம்' தலத்தில், உனக்கு அந்த தரிசனம் கிடைக்கும். மகா சக்தி யான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!’’ என்றார்.

சிவனாரின் சித்தப்படி பூலோகத்துக்குப் புறப்பட்டாள் அம்பிகை. அப்போது கயிலைவாழ் ரிஷிகளும் தேவ மாதர்களும் அன்னையிடம் வந்து, ‘`அம்மா... நீங்கள் செய்யும் தவத்தில் நாங்களும் பங்கு பெற வேண்டும்!’’ என வேண்டினர். அம்பிகையும் ஒப்புக்கொண்டாள்.

புன்னை வனத்தில் முனிவர்கள் புன்னை மரங்களாகித் தங்களது நிழலைப் பூமியில் பரப்பினர். தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். பசுக் குலத்தின் பணிவிடையால் மகிழ்ந்த அம்பிகை, அவற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்த, ‘ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு).

‘கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து ‘கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். விரைவில் அம்பிகைக்கு அருள்மிகு சங்கரநாராயணரின் தரிசனம் கிடைத்தது.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
கடக ராசியில் சூரியன் பிரவேசிக்க, சந்திரன் மகர ராசியில் இருந்து தனது சொந்த வீட்டை 7-ஆம் பார்வையாகப் பார்க்க, ஆடி மாதம் - உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னாளில், ஸ்ரீசங்கர நாராயணராகக் காட்சி தந்தார் இறைவன்.

எந்தத் திருக்காட்சியைக் காண  புன்னைவனத்தில் அன்னை தவம் செய்தாளோ, அந்தக் காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை!

சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள்! சங்கன் - சிவ பக்தன்; பதுமன் - விஷ்ணு பக்தன். இவர் களுக்கிடையே பெரும் போட்டி, சிவா - விஷ்ணு இருவரில் பெரிய வர் யார் என்று! பின்னர், குரு பகவானின் வழிகாட்டுதல்படி, தங்கள் கேள்விக்கான பதிலைத் தேடி புன்னை வனத்துக்கு வந்து தவமியற்றத் தொடங்கினார்கள்.

அவர்களது தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய் தது; சர்ப்பங்களுக்கும் சங்கர நாரா யணரின் தரிசனம் கிடைத்தது. சங்க- பதுமர்கள் சங்கர நாராய ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ``தெய்வமே! நாகங்க ளாகிய எங்களது அறியாமையைப் போக்கி  அருள்புரிந்ததை, நினைவு கூரும் வகையில், எங்களின் பெயரால் ஓர் அடையாளத்தை உருவாக்கி அருளவேண்டும்!’’ என வேண்டினர்.

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
‘`அப்படியே ஆகட்டும்!’’ என்ற சங்கரநாராயணரின் அருளால், அப்போது உருவான நாக சுனைத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.

புன்னைவனமாகத் திகழ்ந்த இடமே, இன்று சங்கரன்கோவில் எனும் புண்ணிய க்ஷேத்திரமாகத் திகழ்கிறது. அம்பிகைக்கு ஈசன் அருள்பாலித்த வைபவம், சங்கரன் கோவிலில் ‘ஆடித் தபசு’ என்ற பெயரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைப் பற்றி அறியுமுன், சங்கரன்கோவிலின் மகிமைகளை  விரிவாக அறிந்துகொள்வோம்.


ஸ்ரீசங்கரநயினார் கோவில்

திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில், ராஜபாளையத்துக்குத் தெற்கில், சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சங்கரன்கோவில். விருதுநகர்- தென்காசி ரயில் மார்க்கத்தில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு.

•   சிவபெருமானின் 64 மூர்த்தங் களில், இறைவன் `அரியர்த்தர்' திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலம் சங்கரன்கோவில்.

•   இது, பாண்டிய நாட்டின் பஞ்சபூதத் தலங்களில் பிருதிவி (மண்) தலமாகத் திகழ்கிறது. மற்றவை: தேவதானம்(ஆகாயம்), தென்மலை (வாயு), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு). இங்கு அருளும் இறைவன் ஸ்ரீசங்கரலிங்கனாரின் பெயரா லேயே, தலத்தின் பெயரும் வழங் கப்படுகிறது.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
•    முற்காலத்தில் வழங்கப்பட்ட, ‘சங்கரநயினார்கோவில்’ என்ற பெயர் பிற்காலத்தில், ‘சங்கரன் கோவில்’ என்று மருவியதாகச் சொல்கிறார்கள். ராசபுரம், பூ கயிலாயம், புன்னைவனம், சீராசபுரம், கீராசை, வாமாசைபுரம், கூழை நகர் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு.

•   சுற்றுவட்டார கிராம மக்கள், ஆவுடையம்மன் கோயில், தவசுக் கோயில் ஆகிய பெயர் களால் அழைக்கின்றனர்.

தேவர்களும் மகான்களும் வழிபட்ட திருத்தலம்

• கோமதியம்மன் மட்டுமின்றி இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவர்களும் அகத் தியர், பத்திசாரர் ஆகிய முனிவர் களும் வழிபட்ட தலம் இது.

•   தேவேந்திரனின் மகனான சயந்தன், சீதாதேவியின் மேல் மையல்கொண்டான். காக்கை யின் வடிவில் வந்தவன், அவள் மேனியில் அலகால் கொத்தித் துன்புறுத்தினான். ஸ்ரீராம பிரான் தர்ப்பைப் புல்லை எடுத்து சயந்தன் மீது ஏவினார். இதனால் ஒரு கண்ணில் பார்வை இழந்த சயந்தன், காக்கை உருவை நீக்க முடியாமலும் வருந்தினான்.

பிறகு, தன் தந்தையின் அறிவுரைப்படி, அவர் கொடுத்த முத்துமாலையுடன் இத்தலத்துக்கு வந்தான். ஸ்ரீசங்கர லிங்கத்துக்கு அந்த மாலையை அணிவித்து வழிபட்டு சுயரூபம் பெற்றான்.

•    உறையூர் சோழன் வீரசேனன், தன் வாரிசுக்கு முடிசூட்டிய பின் இந்தத் தலத்துக்கு வந்து, சிவசன்மன் என்ற அடியார் மூலம் ஐந்தெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிவ பூஜையின் மூலம் ஸ்ரீசங்கரனாரின் திருவருளைப் பெற்றானாம்.
  வேட்டைக்குச் சென்ற இடத்தில் கிடைத்த  புதையலைக் கொண்டு தீய வழியில் பாவத்தைச் சேர்த்த வேடன் ஒருவன், இந்தத் தலத்துக்கு வந்து, நாகசுனையின் கரையில் வீழ்ந்து இறந்ததனால் பாவம் நீங்கி இறையருளைப் பெற் றான் என்கின்றன புராணங்கள்.

• சேற்றூர் என்ற தலத்தின் அருகே ஓடும் தேவியாற்றங் கரையில் வசித்த முனிவர் சிவராதர். இவரின் மகன் கன்மாடன், பசு வைக் கொன்றதனால் உண்டான தனது பாவம் தீர, சங்கரன் கோவிலுக்கு வந்து நாகசுனையில் மூழ்கி மூன்றே நாள்களில் ஸ்ரீசங்கர னாரின் திருவருளைப் பெற்று நற்கதி அடைந்தான் என்பர்.

•   கருவநல்லூரை ஆட்சி செய்த அரசன், பிரகத்துவச பாண்டியன். பிள்ளை இல்லாத இவனது குறையைப் போக்க எண்ணிய கருவநல்லூர் ஈசன், ‘‘நான், ஸ்ரீசங்கரனார் என்ற நாமத் துடன் அருள்பாலிக்கும் தலம் புன்னை வனம். அங்குள்ள எனது கோயிலைப் பெரிதாக் கட்டி வழிபாடு செய். விரைவில் உனது குறை நீங்கும்!’’ என்றருளினார். அதன்படியே பிரகத்துவச பாண் டியன், புன்னை வனம் வந்து வழிபட்டு ஸ்ரீசங்கர லிங்கனாரின் திருவருளால் விஜயகுஞ்சர பாண் டியனை மகனாகப் பெற்றான்.

•   1923-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திருச்செந்தூருக்குச் சென்ற காஞ்சி மகா பெரியவர், அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருந் தார். பிறகு, பாத யாத்திரையாகச் சென்று அம்பாசமுத்திரம், பாப நாசம், தென்காசி, திருக்குற்றாலம் ஆகிய தலங்களைத் தரிசித்து விட்டு இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீகோமதியம்மன் சமேத சங்கர லிங்கர் மற்றும் சங்கர நாராய ணரைத் தரிசித்ததாகக் கூறுவர்.


புகழ் பாடும் ஞானநூல்கள்

இந்தத் திருத்தலத்தையும், இங்கு உறையும் தெய்வங்களையும் போற்றும் நூல்கள் பல உண்டு. அவை: சங்கரநயினார் கோயில் சங்கரலிங்கர் உலா, சங்கரநயினார் கோயில் அந்தாதி, சங்கரலிங்கர் சதகம், கோமதியம்மை பிள்ளைத் தமிழ், சங்கர சதாசிவ மாலை.

•   இவற்றுள் ‘சங்கரநயினார் கோயில் அந்தாதி’ எனும் நூல் ‘கூழையந்தாதி’ என்று சிறப்புப் பெயருடன் திகழ்கிறது. இதை, மகோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். தவிர, மதுரை ராமலிங்கம் பிள்ளை இயற்றிய, ‘சங்கரநயினார்கோவில் கோமதியம்மை தவ மகிமை அம்மானை’ மற்றும் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுவர மூர்த்திப் பிள்ளை இயற்றிய, ‘கோமதி ரத்தின மாலை’ ஆகிய நூல்களும் பிரசித்திப் பெற்றன.

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
•   ‘பூ கயிலாய மான்மியம்’ என்கிற ஸ்ரீசங்கர நாராயண க்ஷேத்ர மான்மியம்’ என்ற வடமொழி நூல், தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு 1919-ல் வெளியானது. இதே நூல் மீண்டும் 96-ல் அச்சிடப்பட்டது.

•   திருக்குற்றாலக் குறவஞ்சி எனும் நூல், சங்கர நயினார் கோயிலை, ‘புன்னைக் காவு’ என்று குறிப்பிடுகிறது.

•   ‘கோமதி மகிமை’ என்ற தலைப்பில் வரும் பாரதியாரது தோத்திரப் பாடல்கள் சங்கரன் கோவிலின் மகிமையைக் கூறுகின் றன.

•   சங்கரன்கோவிலின் தல புராணத்தை இயற்றியவர் சீவலமாற பாண்டி மன்னர் ஆவார். சுமார் 790 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர், இந்தத் தலத்தில் சிறிது காலம் தங்கியிருந்ததாகவும் அறிய முடிகிறது.

•   இந்த ஊருக்குத் தென்மேற் கில் உள்ள சீவலப்பேரி குளம், இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள சீவலராயன் ஏந்தல் எனும் ஊர் ஆகியன இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
சர்ப்பமும் யானையும்!

தல புராணத்தின் முதல் ஆறு சருக்கங்கள், ஊற்று மலை சமஸ்தான வித்வான் புளியங்குடி முத்து வீரப்பக் கவிராயரால் கி.பி.1913-ல் இயற்றப்பட்டவை. தலபுராணத்துக்கு பதவுரையும், சுருக்கமும் எழுதியவர் மு.ரா.அருணாசலக் கவிராயர்.

•   ஸ்ரீசங்கரலிங்கனார் சந்நிதி யின் நிருதி திக்கில் சங்கர (இந்திர) தீர்த்தம் உள்ளது. ஊருக்குத் தெற்கில் உள்ளது ஆவுடைப் பொய்கை. இதில், தை மாதம் கடைசி வெள்ளியன்று தெப்பத் திருவிழா நடைபெறும். கல்வெட்டு மற்றும் சரித்திரக் குறிப்புகளின்படி சுமார் 945 ஆண்டுகளுக்கு முன்பு, உக்கிர பாண்டிய மன்னரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

•   தேவர்களுள் ஒருவனான மணிக்கிரீவன், பார்வதிதேவியின் சாபத்தால் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவன், புன்னை வனத்தின் (கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீபால்வண்ணநாதர் ஆலயத்தில் உள்ள தோட்டத்தின்) காவலனாக பணி புரிந்தான்.

ஒரு நாள் தோட்டப் பராமரிப்பு பணியின் நிமித்தம் அங்கிருந்த புற்று ஒன்றை அகற்ற முற்பட்டான் அந்தக் காவலன். அப்போது அதனுள் இருந்து பாம்பு ஒன்றின் மீது வெட்டுப்பட்டு, துண்டானது. அருகில் சிவலிங்கம் ஒன்றும் வெளிப்பட்டது. காவலன் திகைத்தான். இதை மன்னரிடம் தெரிவிக்க ஓடினான்.

•   இந்த நிலையில், ஸ்ரீமீனாட்சி யின் பக்தரான மன்னர் உக்கிர பாண்டியர் (இவர் மணலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்), அம்மனைத் தரிசிக்க மதுரைக்குக் கிளம்பினார். வழியில் பெருங்கோட்டூர் என்ற இடத்தை அடைந்ததும் அவரது பட்டத்து யானை மேற்கொண்டு நகராமல் அடம்பிடித்தது. தனது தந்தங்களால் மோதி தரையைப் பெயர்த்த யானை அங்கேயே படுத்துக்கொண்டது!

•   ‘ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்துவிட்டதோ!’ என மன்னர் பதறினார். அப்போது, மன்னர் இங்கிருக்கும் செய்தியறிந்து ஓடோடி வந்த காவலன், புன்னை வனத்தில் நிகழ்ந்ததை மன்னரிடம் விவரித்தான். அவனுடன் புன்னை வனம் சென்ற மன்னர் உக்கிரபாண்டியன், அங்கிருந்த புற்றையும், வாளால் தாக்கப்பட்ட பாம்பையும், புற்றிடம் கொண்ட லிங்க மூர்த்தியையும் கண்டார். அப்போது, அங்கே ஒரு சிவால யம் அமைக்கும்படி ஓர் அசரீரி கேட்டது. அதன்படியே அந்த இடத்தில் சிவாலயம் எழுப்பிய உக்கிரபாண்டியன், பெருவிழா எடுத்துக் கொண்டாடினான்.இந்த ஆலயமே ஸ்ரீசங்கர நாராயணர் திருக்கோயில். உக்கிரபாண்டியனின் பட்டத்து யானை தனது தந்தத்தால் (கோடு) தரையைத் தோண்டிய இடமே இன்றைய பெருங்கோட்டூர்.



சூரியனின் வழிபாடு

பராக்கிரம பாண்டியன், பாண்டியன் கெடிலவர்மன், அதிவீரராம பாண்டியன் ஆகியோரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

• திருநெல்வேலியைச் சார்ந்த வடமலையப்பப் பிள்ளையும் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். சங்கரனார் திருக் கோயிலை இன்று நாம் காணும் அளவுக்குப் புதுப்பித்தவர் முன்னாள் தர்மகர்த்தாவான அமரர் என்.ஏ.வி. சோமசுந்தரம் பிள்ளை என்பார்கள்.

•   ரத வீதிகள் சூழ ஊரின் நடுநாயகமாக, சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயில். ஆனையூர் மலையில் இருந்து கல் எடுத்து வரப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

• இது, ஒரே வளாகத்தில்  ஸ்ரீசங்கரலிங்க சுவாமி கோயில், ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் மற்றும் ஸ்ரீகோமதி அம்மன் கோயில் என மூன்று பிரிவாகத் திகழ்கிறது.

• திருக்கோயிலின் ராஜ கோபு ரம் சுமார் 125 அடி உயரத்துடன் 9 நிலைகளைக் கொண்டு திகழ்கிறது.  ராஜ கோபுர வாயி லுக்கு நேரே கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கரலிங்கனார் சந்நிதி.

•   கோயிலின் கன்னிமூலையில் ஸ்ரீசர்ப்ப விநாயகர் அருள்கிறார். வாயு மூலையில் ஸ்ரீநாகராஜனுக்குப் புற்றுக்கோயில் உள்ளது. சர்ப்ப விநாயகரை வணங்கி நாகராஜனுக்குப் பால், பழம் முதலானவற்றை நைவேத்தியம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

• கருவறையில் சிறிய லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான். இவர் சுயம்பு லிங்கம். அருகே எழிலே உருவாக ஸ்ரீமனோன்மணிதேவி அருள்கிறாள்.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
•   ஸ்ரீசங்கரலிங்கனார், மணிக் கிரீவன் என்ற காவல னுக்கு வாலற்ற பாம்பு வடிவில் காட்சி கொடுத்ததால் இவருக்குக் கூழைப்பிரான் என்ற பெயரும் உண்டு. எனவே இந்தத் தலமும் கூழை நகர் என்றானது. இங்கு ஓடும் ஆறு கூழை எனப்பட்டது. தவிர இந்த இறைவனை- கூழைக் குழகர், கூழை அமலர், தென்கூழைச் சங்கரர், கூழையரும் பொருள், கூழைக் கறைக் கண்டர், கூழைக் கங்காளர், கூழைவிமலர், கூழையுகந்த பிரான், கூழைப் புனிதர், கூழைக் கண்ணுதலார் ஆகிய பெயர்க ளாலும் வழங்குவர்.

•   ஸ்ரீசங்கர மூர்த்தி, வாராசை நாதன், வைத்தியநாதன், சீராசை நாதன், புன்னைவன நாதன், கூழை யாண்டி ஆகிய திருப்பெயர்களும்  இந்த இறைவனுக்கு உண்டு. ஸ்ரீசங்கரலிங்கனாரின் உற்சவருக்கு ஸ்ரீஉமாமகேஸ்வரர் என்று திருநாமம்.

• தட்ச யாகத்தில் பங்கு கொண்ட சூரியனைக் கடுமை யாகத் தண்டித்தார் அகோர வீரபத்திரர். இதனால் ஏற்பட்ட உடற் துன்பமும், சிவ நிந்தை செய்ததால் ஏற்பட்ட பாவமும் தீர, சூரிய பகவான் 16 க்ஷேத்திரங்களில் சிவ பூஜை செய்தார். அதில் ஒன்று சங்கரன்கோவில் என்பர்.

புரட்டாசி, பங்குனி மாதங் களில் முறையே மூன்று நாள்கள் சூரியக் கதிர்கள் ஸ்ரீசங்கர லிங்கத்தின் மீது விழுந்து பூஜிப்ப தைக் காணக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

• இந்தச் சந்நிதியில் வேண்டு தல் பெட்டி ஒன்று உள்ளது. நாக தோஷம் மற்றும் தேள் முதலான விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்க... வெள்ளி மற்றும் தாமிரத்தாலான அவற்றின் வடிவங்களையும், கண் மற்றும் கை- கால்களில் ஏற்படும் நோய் மற்றும் குறைபாடுகள் நீங்க... வெள்ளி மற்றும் பித்தளையால் ஆன (குறிப்பிட்ட) உடல் உறுப்புகளையும் இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
கோமதியம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்கரக் குழி...

ஸ்ரீகோமதியம்மனின் சந்நிதி, திருக்கோயிலின் வடபுறத்தில் தனிக்கோயிலாக திகழ்கிறது. இங்கும் கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன சுற்றுப் பிராகாரங்களுடன் கூடிய அம்மன் சந்நிதிக் கருவறையில் கருணை ததும்பும் முகத்துடன் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீகோமதி அம்மன்.

• ‘கோ’ என்றால் பசு என்று பொருள். ‘மதி’ என்பது ‘ஒளி நிறைந்த’ என்று பொருள்படும். ஒளி மிகுந்த திருமுகம் கொண்ட இந்த அம்பாள், பசுக்களாகிய உயிர்களைக் காப்பவள். ஆதலால் இவளுக்குக் கோமதி என்று பெயர். ஆவுடையம்மன் என்ற பெயரும் இவளுக்கு உண்டு.

• மதுரை- ஸ்ரீமீனாட்சி, சங்கரன் கோவில்- ஸ்ரீகோமதி, நெல்லை- ஸ்ரீகாந்திமதி மூவரையும் முறையே இச்சா-கிரியா -ஞான சக்திகளாக சித்திரிப்பர்.

•   ஸ்ரீகோமதியம்மன் - மதுரை மீனாட்சியம்மனின் சகோதரி யாகக் கருதப்படுகிறாள். ஸ்ரீகோமதியை தரிசிக்கச் செல்லு முன், மதுரை- ஸ்ரீமீனாட்சியை தரிசித்து ‘உன் சகோதரியைக்  காணச் செல்கிறேன். எனக்கு நல்லருள் புரிவாய்!’ என்று வழிபட்டுச் செல்வார்கள். அத்துடன், கோமதி அம்மனை தரிசித்த பின்னர், மீண்டும் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனிடம், ‘உன் சகோதரியை நன்றாக தரிசித்தேன், நன்றி!’ என்றும் கூறி வழிபட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

•   சங்கரன்கோவிலில் அன்னை யான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங் கைச் செய்கிறார்கள்.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
• மேலும், வேண்டுதல் நிமித்தம் செவ்வரளி மலர்களைப் பரப்பி அவற்றின் நடுவே இரட்டை தீபங்கள் ஏற்றிவைத்தும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.

•   கோமதியம்மை சந்நிதிமுன் உள்ள ஸ்ரீசக்கரம் மகிமை வாய்ந்தது. இதைப் பிரதிஷ்டை செய்தவர், திருவாவடுதுறை ஆதினம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள். இந்த ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து அம்மையை தியானித்து வழிபட்டால், எண்ணிய காரியம் நிறைவேறும். பிணிகளும் தீவினைகளும் அகலும் என்பது ஐதீகம்.

• பிள்ளைப் பேறு இல்லாத வர்கள் இந்த இடத்தில் அமர்ந்து 11 நாள்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஸ்லோகங்கள் கூறி அம்பாளை வழிபட்டால், மகப்பேறு நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

அம்பாள் அலங்காரம்!

கோமதி அம்பாளுக்குத் திங்கள் கிழமை, மாலை 5:30 மணிக்கு - பூப்பாவாடை; செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. தவிர, தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் தங்கப் பாவாடை அணிவிக்கப்படுகிறது. பிரதி மாதம் கடைசித் திங்களன்று முழுக் காப்பும், தமிழ் மாதப் பிறப்பன்று இரவு 7:00 மணிக்கு தங்கப் பாவாடை சார்த்து தலுடன் தங்கத் தேர் உலாவும் நடைபெறுகின்றன.

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
• இங்கு, தங்க ஊஞ்சல் கொண்ட பள்ளியறை ஒன்று உண்டு. இந்தப் பள்ளியறையின் உள் பகுதியில் மரகதக் கல் பதிக்கப்பட்டுள்ளது.

• அம்மன் சந்நிதியின் பிராகார வாயு மூலையில் புற்று மண் பிரசாதம் சேமிக்கப்பட்டுள்ளது. இது, சகல தோல் நோய்கள் மற்றும் விஷக் கடிகளுக்கு சிறந்த மருந்தாகும். இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றி யில் இட்டுக் கொண்டால், கெடு பலன்கள் நீங்கும்.


ஸ்ரீசங்கரநாராயணர்

ஸ்வாமி மற்றும் அம்பாள் கோயில்களுக்கு நடுவே ஸ்ரீசங்கர நாராயணர் சந்நிதி தனிக் கோயி லாக உள்ளது.

•   வலப் புறம்- கங்கையைத் தரித்த சடாமகுடமும், நாக குண்ட லமும், அழகிய திருநீறணிந்த மேனி திகழ சிவனாராகவும்... இடப் புறம்- ரத்தினக் கிரீடம், மகர குண்டலங்கள், கஸ்தூரிப் பொட்டு திகழ நாராயணராகவும் காட்சி தருகிறார் ஸ்ரீசங்கரநாராயணர்.

மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
•   இவரின் சிவ பாகத்தில்- மழு, பாம்பாபரணம், கொன்றை மாலை, புலித் தோல் உடை மற்றும் பாம்புக் கழல் ஆகியனவும் விஷ்ணு பாகத்தில்- சக்கரம், பொற் பூணூல், துளசி மாலை, பீதாம்பரம் மற்றும் பொற்கழல் ஆகியனவும் திகழ்கின்றன.

•   ஸ்ரீசங்கரநாராயணர் உற்சவ மூர்த்தியும் இவ்வாறே காட்சி தருகிறார். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனால் ஸ்ரீசங்கரநாராயணரின் ஒரு பாகம் திருமாலுக்கு உரியது ஆதலால் ஸ்ரீசங்கரநாரயணருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாக இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத் துக்கே அபிஷேகம் நிகழ்கிறது.

•   சங்கரநாராயணர் சந்நிதியில் வசனக் குழி என்ற பள்ளம் ஒன்று உள்ளது. இது, தெய்விக சக்தி மிகுந்தது என்பது ஐதீகம். பேய் மற்றும் பில்லி- சூனியத்துக்கு ஆளான பலர், இந்த வசனக் குழியில் அமர்ந்து பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.
  இந்தக் கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் காண்பதற்கரிய ஒரு சிறப்பு நாகராஜர் சந்நிதி. இங்கு பாம்பு புற்று உள்ளது. அதைச் சுற்றி கோயில் எழுப்பியிருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜருக்கு பழம், பால் ஆகியவை படைக்கிறார்கள்.



•   சிவாலய வழக்கப்படி விபூதி, விஷ்ணு கோயில் வழக்கப்படி தீர்த்தம் ஆகிய இரண்டும் வழங்கப்படும் திருக்கோயில் இது.

•   அர்த்த ஜாம பூஜை முடிந்து சந்நிதியில் வழங்கப்படும் பிரசாதப் பாலை, தொடர்ந்து 30 நாள்கள் பருகி வந்தால், மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கோயிலின் நடை திறப்பு விவரங்கள்

காலை 5 மணி: நடை திறப்பு
காலை 5.30: திருவனந்தல்
காலை 8.30 : சிறுகால சந்தி
பகல் 12.00: உச்சி கால பூஜை
பகல் 12.30: நடை அடைப்பு
மாலை 4.00: நடை திறப்பு
மாலை 5.30: சாயரட்சை
இரவு 9.00: அர்த்த சாம பூஜை;
பிறகு நடை அடைப்பு.

 இங்கு ஆடித் தபசு, ஐப்பசி திருக்கல்யாணம், சித்திரை பிரம்மோற்சவம், நவராத்திரி, சூர சம்ஹாரம், சிவராத்திரி ஆகியன  கொண்டாடப்படுகின்றன.


மங்கலங்கள் அருளும் ஆடித்தபசு! - சிறப்புத் தொகுப்பு
ஆனந்தம் அருளும் ஆடித் தபசு!

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பத்து நாட்கள், திருவிழா நடைபெறும்.

•   உத்திராட நட்சத்திரத்தன்று ஆடித் தபசு மண்டபத்தில் கோமதி யம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறுகிறது.

•   அன்று காலையில், 9-30 மணியளவில் அம்பாளுக்கு அபிஷேகம் தொடங்கும். அபிஷேக அலங்காரங்கள், தீபாராதனை முடிந்து, 11-30 மணியளவில் அம்பாள் தவக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, நாலு ரத வீதிகளையும் வலம் வருவாள்.

•   வீதியுலா வரும் அம்பிகை தெற்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருள்வாள்.

•   மாலை 6 மணியளவில், ஸ்வாமி சங்கரநாராயணராக தரிசனம் அருளும் வரை, அந்த  மண்டபத்தில்தான் அம்பாள் அருள்பாலிப்பாள். அப்போது பக்தர்கள் அம்பாளை தரிசித்து வழிபடலாம்.

•   இந்த நிலையில் மாலை 3 மணியளவில், தெற்கு ரத வீதியில் சுமார் 20 அடி இடைவெளியில் இரண்டு பூப்பந்தல்கள் போடப்படும்.

•   அதேநேரம் திருக்கோயிலில் ஸ்ரீசங்க ரநாராயணருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிறகு ஸ்ரீசங்கரநாராயணர் வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, தெற்கு ரத வீதியில் போடப்பட்டிருக்கிற பூப்பந்தலுக்கு வருவார்.

•    சங்கர நாராயணர், அம்பா ளுக்குக் காட்சி தரும் வரையிலும்,  ஸ்ரீசங்கரநாராயணரை எவரும் பார்க்க முடியாதபடி திரை போடப்பட்டிருக்கும்.

•   மாலையில், தபசு மண்டபத் திலிருந்து புறப்படும் அம்பாள், இந்தப் பூப்பந்தலுக்கு வந்து, ஸ்ரீசங்கரநாராயணரை மூன்று முறை வலம் வருவாள். வலம் நிறைவுற்றதும், அடுத்துள்ள பூப்பந்தலில் அம்பிகை எழுந்தருள் வாள். அடுத்த சில கணங்களில், ஸ்வாமியை  மறைத்திருக்கும் திரை விலக, ஸ்ரீசங்கரநாராயணர் அம்பிகைக்கு தரிசனம் தருவார்.

ஒருமுறை தரிசித்தாலும் பலகோடி நன்மைகளை அள்ளித் தரும் அற்புத தரிசனம் அது!

•   இந்த வருடம், வரும் ஆடி மாதம் 28-ம் நாள் (13.8.19) வெள்ளிக் கிழமையன்று, சங்கரன்கோவில் திருத்தலத்தில் ஆடித் தபசு வைபவம் நிகழவுள்ளது. இந்த வைபவத்தில் கலந்துகொண்டு கோமதி அம்மனையும் சங்கர நாராயணரையும் தரிசித்து வழிபடுவோருக்கு மங்கலங்கள் யாவும் கைகூடும். அவர்களின் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதுமட்டுமா? திருமணத் தடைகள் நீங்கும். கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வாழ்வில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். சந்ததியினரின் எதிர்காலம் சிறக்கும்.

•   கேடா வரு நமனைக்
கிட்ட வராதே தூரப் போடா
என ஓட்டி, உந்தன் பொற்கமலத்
தாள்நிழற் கீழ்
வாடா! என அழைத்து
வாழ்வித்தால், அம்ம,
உனைக் கூடாதென்றுயார் தடுப்பார்,
கோமதித் தாய் ஈஸ்வரியே...

திருநெல்வேலி அழகிய சொக்க நாதப்பிள்ளை என்ற பக்தர், சங்கரன்கோவிலின் நாயகியாம் அன்னை கோமதியைத் துதித்துப் பாடிய மிக அற்புத மான பாடல் இது.

வரும் ஆடித்தபசு திருநாளன்று நீங்களும் சங்கரன்கோவிலுக்குச் சென்று, அன்னை கோமதியை யும், சங்கரநாராயணரையும் அகம் மலர, உள்ளம் உருக தரிசித்து வழிபட்டு வாருங்கள். அம்மையின் திருவருளால் உங்கள் இல்லம் செழிக்கும்; வருங்காலம் சிறக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக