செவ்வாய், 24 செப்டம்பர், 2019

நவராத்திரி ஸ்பெஷல் - நவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்?


நவராத்திரி ஸ்பெஷல் - நவராத்திரியில் அம்பாளை எப்படி வழிபட வேண்டும்?

ஜெகத்திற்கே தாயான ஜெகன் மாதாவை நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவமாக வணங்கி போற்ற வேண்டும். அதற்கான முறைகளை நாம் தெரிந்துக் கொள்வது அவசியம்.

நவராத்திரி முதல் நாள்- மகேஸ்வரி

முதல் நாள், அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர். மது, கைடபர் என்ற அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் என்பதால் இவளை சாமுண்டியாக அலங்காரம் செய்வார்கள். அன்னைக்கு அரிசி மாவினால் பொட்டுக் கோலம் இட்டு, மல்லிகை மலர்கள் மற்றும் வில்வ இதழ்களாலான மாலையைச் சாற்றி வழிபட வேண்டும்.  நைவேத்தியமாக வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை படைக்கலாம். இவளை வணங்குவதால்,வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.அம்பிகைக்கு உரிய திதி பிரதமை.

மாகேஸ்வரி காயத்ரி

ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி,  தன்னோ மாகேஸ்வரி ப்ரசோதயாத்

நவராத்திரி இரண்டாம் நாள் - ராஜராஜேஸ்வரி

இரண்டாம் நாள்,அன்னை ராஜராஜேஸ்வரியாக  (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்) வணங்கப்படுகிறாள். அன்னையின் முன் கோதுமை மாவினால்,கோலம் இட வேண்டும்.  முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜித்து புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். அன்றைய தினம் அன்னைக்கு உரிய திதி துவிதியை.அன்று அன்னையை வணங்குவதால், நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

கௌமாரி காயத்ரி

ஓம் சிகி வாஹனாய வித்மஹே, சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரி ப்ரசோதயாத்

நவராத்திரி மூன்றாம் நாள் - வாராகி

மூன்றாம் நாள், அன்னை வாராகி (மக்கிஷனை அழித்தவள்) வடிவத்தில் பூஜிக்கப்படுகிறாள்.முத்துக்களைக் கொண்டு, புஷ்பங்கள் போல் கோலம் இட்டு,சம்பங்கி மற்றும் மருக்கொழுந்து மாலையைச் சாற்றி,குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.நைவேத்தியமாக கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல் படைக்கலாம். அன்னைக்கு அன்றைக்கு உரிய திதி : திருதியை. அன்னையை அன்று வணங்குவதால்,தனதானியம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.

வாராஹி காயத்ரி

ஓம் மகிஷாத்வஜாய வித்மஹே,  தண்ட ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

நவராத்திரி நான்காம் நாள் - சிங்காசனத்தில் மகாலட்சுமி

நான்காம் நாள், அன்னையின் திருக்கோலம், சிங்காசனத்தில் மகாலட்சுமியாக வெற்றி திருக்கோலம். அன்னையின் முன் மஞ்சள் அட்சதையினால், படிக்கட்டு அமைத்தாற்போல் கோலம் இட்டு, செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சித்து, நைவேத்தியமாக  தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல் படைக்கலாம். அன்னைக்கு உரிய திதி சதுர்த்தி. செல்வத்திற்கு அதிபதியான அன்னையை வணங்குவதால் கடன் தொல்லை தீரும்.

லக்ஷ்மி காயத்ரி

ஓம் பத்ம வாசின்யைச்ச வித்மஹே, பத்ம லோசனயைச்ச தீமஹி தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

நவராத்திரி ஐந்தாம் நாள் - வைஷ்ணவி வடிவம்

ஐந்தாம் நாள்,வைஷ்ணவி  வடிவத்தில் அன்னை வணங்கப்படுகிறாள் (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்) கடலையைக் கொண்டு, பறவையினம் கோலம் இட்டு, பாரிஜாத மலர்கள் மற்றும் விபூதிப் பச்சை மாலை சாற்றி, கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் படைக்கலாம்.அன்னைக்குரிய திதி பஞ்சமி. நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.அன்னையை வணங்குவதால், நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

வைஷ்ணவி காயத்ரி

ஓம் ஷ்யாம வர்ணாயை வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை சண்டிகாதேவி

ஆறாம் நாள், சர்பராஜ ஆசனத்தில் அன்னை சண்டிகாதேவி அமர்ந்திருக்கும் கோலம்.அன்றைய தினம்,கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட்டு,பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம் பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். தேவிக்குரிய திதி : சஷ்டி. அன்னையை வணங்குவதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

இந்திராணி காயத்ரி

ஓம் கஜத்வஜாயை வித்மஹே,  வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ இந்திராணி ப்ரசோதயாத்

நவராத்திரி ஏழாம் நாள் - சாம்பவித் துர்க்கை

ஏழாம் நாள், அன்னை சாம்பவித் துர்க்கையாக வணங்கப்படுகிறாள்.அன்னையின் முன் நறுமணம் மிக்க மலர்களின் கோலத்தைப் போட்டு,

தாழம்பூ மற்றும் தும்பை இலை மாலையைச் சாற்றி, நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள்,

வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு முதலியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

அன்னைக்குரிய திதி : சப்தமி. தெவியை அன்று வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.

சரஸ்வதி காயத்ரி

ஓம் வாக்தேவ்யை வித்மஹே, வ்ருஞ்சி பத்தின்யை ச தீமஹி தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்

நவராத்திரி எட்டாம் நாள் - நரசிம்ம தாரினி

எட்டாம் நாள், கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த நரசிம்ம தாரினி வடிவமாக காட்சித் தருகிறாள்.காசுகளைக் கொண்டு, தாமரைப்பூவைப் போன்ற கோலம் போட்டு, ரோஜா மலர்கள் மற்றும் பன்னீர் இலைகளால் ஆன மாலையைச் சாற்றி, பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்,பாயசம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அன்று அன்னைக்கு உரிய திதி : அஷ்டமி. அன்னையை அன்று வணங்குவதால் நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

துர்கை காயத்ரி

ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்மஹே,  துர்கா தேவ்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

நவராத்திரி ஒன்பதாம் நாள் - பரமேஸ்வரி

ஒன்பதாம் நாள் கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் , பரமேஸ்வரி, சுபத்ராதேவியாக அன்னை காட்சித் தருகிறாள்.  கற்பூரக் கட்டிகளைக் கொண்டு, அம்பாளின் ஆயுதத்தை, கோலமாகப் இட்டு, தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.நைவேத்தியமாக  சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை போன்றவற்றை படைக்கலாம்.அன்னைக்கு உரிய  திதி : நவமி. அன்னையை வணங்குவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம் சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

சாமுண்டி தேவி காயத்ரி

ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே,  சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ சாமுண்டா  ப்ரசோதயாத்

நவராத்திரி பத்தாம் நாள் - அம்பிகை

கடைசியாக விஜயதசமி நாளன்று, அம்பிகை விஜயாவாக அருளாசி தருகிறாள். படிக்கோலம் போட்டு, ரோஜா, அரளி, மல்லி செம்பருத்தி பூக்கள் கொண்டு அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல்,  இனிப்புகள், வடை, சுக்கும் வெல்லமும் சேர்த்த கலவை, நீர்மோர் பால் பாயாசம், காராமணி சுண்டல் நிவேதனம் செய்யலாம்.  அன்னைக்கு உரிய திதி : தசமி.

விஜயா காயத்ரி

ஓம் விஜயா தேவ்யை வித்மஹே,  மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக