வியாழன், 10 ஆகஸ்ட், 2017

காயத்ரி மந்த்ரத்தின சிறப்பும், செய்முறைகளும்:



காயத்ரி மந்த்ரத்தின சிறப்பும், செய்முறைகளும்:

காயத்ரி ஜபத்தின்  சிறப்பையும், அதனைச் செய்யும் விதிகள் சிலவும் இப்பதிவில் பார்க்கலாம்.

தினமும் காயத்ரி ஜபம் செய்வதால் என்ன பலன் என்பதற்கு வேதத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதலில் காண்போம்.

முன்னொரு காலத்தில் ராக்ஷஸர்கள் கடுமையாகத் தவம் செய்த சமயத்தில் ப்ரஜாபதி(பிரம்மன்)ப்ரத்யக்ஷமாகி ராக்ஷஸர்களுக்கு வரமளிக்க முன்வருகிறார்.

அப்போது ராக்ஷஸர்கள் தங்களுக்கு சூர்யனை எதிர்க்கும் சக்தி வேண்டும் என்று வரம் கேட்கின்றனர்.

ப்ரஜாபதியும் அவ்வரத்தைக் கொடுத்துவிடுகிறார். இவ்வரத்தின் காரணமாக நித்ய சஞ்சாரம் செய்யும் சூர்யனது சஞ்சாரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.

உதயத்தின் போதும், அஸ்தமனத்திலும் அஸுரர்கள் சூர்யனை எதிர்க்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு சூர்யனுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க தேவர்கள் ஒர் உபாயத்தைச் செய்கின்றனர், அதுவே சந்த்யா வந்தனம்.

இதில் செய்யப்படும் ஜபமானது சூர்யனுக்கு, ராக்ஷசர்களை எதிர்க்கும் பலத்தைக் கொடுப்பதுடன், சந்த்யாவந்தனத்தில் அவனுக்குக் கொடுக்கப்படும் அர்க்யமானது வஜ்ராயுதமாகி ராக்ஷஸர்களை அழிப்பதாகவும் சொல்லுகிறார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு சந்த்யா காலத்திலும் சூர்யனை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் இந்த ஜபத்தால் மந்தேஹாருணம் என்னும் தீவிற்கு தள்ளப்படுகிறார்கள்.

ராக்ஷஸர்கள் அத்தீவிலிருந்து வெளியேறி சூர்யனை எதிர்க்க இயலாவாறு மீண்டும் மீண்டும் செய்யப்படும் காயத்ரி ஜபத்தின் காரணமாக சூர்யனுடைய சஞ்சாரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாது இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு சூர்யனுக்கே ரக்ஷையான காயத்ரியை அதிக அளவில் ஜபம் செய்பவர்களுக்கு எவ்வித பலன்கள் கிடைக்கும் என்பதை அளவிடவும் முடியுமோ?

சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..!

நிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம்.

உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்களில் சிறந்த காயத்ரி மந்திரம் ஓதுவதால் ஆத்ம சுத்தி கிடைக்கும்.

 கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என கிருஷ்ண பகவான் கூறியுள்ளார்.

தன்னை ஜெபிக்கின்றவர் களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரம் எனப்  பெயர் ஏற்பட்டது.

விஷ்ணு பகவான் உலகை சிருஷ்டிக்க திருவுளம் கொண்டபோது அவரது முகத்திலிருந்து காயத்ரி மந்திரம் தோன்றியதாம்...!

ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்த போது
"த்ரயி' என்ற வேதசாரம் கிடைத்தது.

அதனை காணமதி என்ற மத்தினால் கடைந்த போது காயத்ரி தேவியின் வடிவம் தோன்றியது ..!

வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

விஸ்வாமித்திரரின் தவத்தால் மகிழ்ந்த காயத்ரிதேவி  காயத்ரி மந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள்.

உலக நன்மையைக் கருத்தில்கொண்டு அவர் அதை நமக்கு வழங்கினார்.

விஸ்வாமித்திரரிடம் காயத்ரி மந்திர உபதேசம் பெற்றதாலேயே ஸ்ரீராமபிரான் இராவணனை வென்றதாகவும் சொல்லப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு.

காப்பாற்றுபவள் எனப் பொருள்படும் அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

நாடு சுபிட்சமடையவும்  கொடிய நோய்கள் அகலவும் காயத்ரிமந்திரம் உதவும்.

சிறப்புமிக்க காயத்ரிதேவிக்கு சரஸ்வதி, பார்வதி, மகேஸ்வரி, லட்சுமி, மனோன்மணி எனும் ஐந்து முகங்கள் உண்டு...

ஒருமுகம் பவளம்போல் செந்நிறமாகவும்,
ஒரு முகம் பொன்னிறமாகவும்,
ஒருமுகம் ஆகாய நீல நிறத்திலும்,
நான்காம் முகம் தூய வெண்ணிறமாகவும்,
ஐந்தாம் முகம் முத்துப்போல் ஒளி வீசுவதாகவும் அமைந்துள்ளன.

இந்த ஐந்து முகங்களும் சிவனைப்போல் ஐந்தொழிலையும் செய்கின்றன.

காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும்,
நண்பகலில் நடுத்தர வயதினளாகவும்,
மாலையில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவளாகவும்
மூவகைத் தோற்றம் தருகிறாள் என்பர்.

காலையில் சரஸ்வதியான பிரம்ம சொரூபிணியாய்,
நண்பகலில் சாம்பவியான ருத்ர சொரூபிணியாய்,
மாலையில் வைஷ்ணவியான விஷ்ணு சொரூபிணியாக
அருளாட்சி புரிகிறாள்..!

காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும்,
பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும்,
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக
காயத்ரி  ஸ்தோத்திரம் குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்த்ரமானது வேதங்களின் ஸாராம்சம் என்றால் மிகையாகது. காயத்ரியின் முதல் பாகமான ப்ரணவம் மூன்று எழுத்துக்களால் ஆனது.

அகாரம், உகாரம், மகாரம் ஆகிய மூன்றும் மூன்று வேதங்களிலிருந்து எடுத்து ஒன்றாக்கியது.

இதே போல காயத்ரியின் இரண்டாம் பாகமான வ்யாஹ்ருதிகள் மூன்றும், மூன்று வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டதாம்.

இதே போல, மந்த்ரத்தின் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்திலிருந்தும், 'பர்க்கோ தேவஸ்ய தீமஹி' என்பது யஜுர்வேதத்தில் இருந்தும், தியோயோந: ப்ரஜோதயாத்' என்பது ஸாம வேதத்திலிருந்தும் எடுத்து ஒரே மந்த்ரமாக அருளப்பட்டிருக்கிறது.

ஆகவே ஒருவன் செய்யும் காயத்ரி ஜபமானது மூன்று வேதத்தையும் அத்யயனம் செய்த பலன் தருவதாக மனு கூறுகிறார்.

வேத வியாஸர் காயத்ரி ஜபத்தின் சிறப்பைச் சொல்லுகையில், இந்த ஜபத்தை பத்து முறை ஜெபிப்பதால் மூன்று நாட்கள் செய்த பாபங்கள் போவதாகவும், நூறு முறை ஜபம் செய்வதால் செய்பவனது பாப கூட்டமே விலகிவிடுவதாகவும், ஆயிரம் முறை ஜபம் செய்வதால் உபபாதகம் எனப்படும், கோவதம், காலாகாலத்தில் உபநயனம் செய்யாதது, சம்பளம் கொடுத்து வேதம் கற்றல், அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் செய்யாததால் ஏற்படும் பாபங்கள், செய்நன்றி மறத்தல் போன்ற பாபங்கள் நீங்குவதாகவும் கூறுகிறார்.

மேலும், கோடி ஆவர்த்தி ஜபம் செய்பவனுக்கு தேவர்- கந்தர்வர்களாகும் வாய்ப்பும் உண்டென்று கூறுகிறார்.

காயத்ரி மந்த்ரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் இம்மந்த்ர ஜபத்தின் பலனைக் கூறுகையில், ஸப்தவ்யாஹ்ருதிகளுடன் கூடிய ப்ரணவ ஸஹித காயத்ரியை உச்சாரணம் செய்பவனுக்கு ஒரு போதும் பயம் என்பதே இருக்காது என்கிறார்.

மேலும் சொல்கையில், இந்த மந்த்ரத்துக்கு ஸமமானது நான்கு வேதங்களிலும் ஏதும் இல்லை என்றே கூறுகிறார்.

ஒருவன் வேத அத்யயனம் செய்ய முடியாவிடினும், தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய இயலாவிடினும், காயத்ரி ஜபத்தை விடாது செய்வானாகில், அவனுக்கு
எவ்வித இடையூறும் இல்லாது நிர்பயமாக வாழ்வான் என்கிறார்.

எத்தனை முறை ஜபம் செய்ய வேண்டும் என்பதையும் விச்வாமித்ரர் சொல்லியிருக்கிறார். அதாவது, உயர்ந்த பக்ஷமாக ஆயிரத்து எட்டு முறையும், மத்யமமாக நூற்றெட்டு முறையும், அதம பக்ஷமாக பத்து முறையும்செய்ய வேண்டும் என்கிறார்.

இதையே பரத்வாஜர் சொல்லுகையில் அதமமாக இருபத்து எட்டு முறை ஜபம் செய்ய வேண்டும் என்கிறார்.

இந்த அதம பக்ஷம் என்பது ஆசொளச காலம் மட்டுமே!. மற்ற நேரங்களில் மத்யமமாகவாவது செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

காயத்ரி மந்த்ரம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அவை, ஏகப்ரணவ ஸஹித காயத்ரி, ப்ரணவ ஸம்புடித காயத்ரி, ஷடோங்கார காயத்ரி என்பதாம்.

இவற்றில் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தன் ஆகியோருக்கு ஏகப்ரணவ காயத்ரியும், ஸம்புட காயத்ரிவானப்ரஸ்தர்களுக்கும், யதி ஸ்ரேஷ்டர்களுக்கு ஷடோங்கார காயத்ரியும் சொல்லப்பட்டிருக்கிறது.

இம்மூன்றுக்குமான வித்யாசங்கள் இங்கே தேவையில்லை, அவை குருமூலமாக அறியவேண்டியது.

ஜபம் செய்யும் வேளைக்கு ஏற்றவாறு காயத்ரி தேவி பெயராலும், உருவத்தாலும் வேறுபடுவதாகச் சொல்லியிருக்கிறார் யஜ்ஞவல்க்யர்.

காயத்ரிதேவி காலையில் குழந்தையாகவும்,
நண்பகலில் நடுத்தர வயதினளாகவும்,
மாலையில் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவளாகவும்
மூவகைத் தோற்றம் தருகிறாள் என்பர்.

காலையில் சரஸ்வதியான பிரம்ம சொரூபிணியாய்,
நண்பகலில் சாம்பவியான ருத்ர சொரூபிணியாய்,
மாலையில் வைஷ்ணவியான விஷ்ணு சொரூபிணியாக
அருளாட்சி புரிகிறாள்..!

காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும்,
பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும்,
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக
காயத்ரி  ஸ்தோத்திரம் குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது.
"ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்.'

  "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும்.

மேலும் யஜ்ஞவல்க்யர் இது பற்றிச் சொல்லுகையில், கிருஹத்தில் ஜபம் செய்கையில் என்ன பலனோ அதை விட இருமடங்கான பலன் நதி போன்ற தீர்த்தகரையில் செய்கையில் கிடைப்பதாகவும், மாட்டுக் கொட்டிலில் செய்கையில் பத்து மடங்காகவும், அக்னி சாலையில் செய்கையில் நூறு மடங்காகவும், ஆலயங்களில், ஸ்ரீ விஷ்ணு ஸந்நிதியில் கோடிக்கணக்கான மடங்கும் அதிகரிக்கும் என்கிறார்.

ஜபம் செய்யும் முறை பற்றி வியாசர் குறிப்பிடுகையில், மந்த்ரத்தை பதம், பதமாக பிரித்து ஜபிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது ஜபம் செய்கிறவனுக்கு ரெளரவம் என்னும் கொடிய நரகத்தை அடைய வேண்டியதிருக்கும் என்கிறார்.

மூன்று பதங்களாகப் பிரித்து ஜபம் செய்பவனுக்கு ப்ரம்ம ஹத்தி முதலான அனைத்துப் பாப கூட்டங்களும் நீங்குவதாகச் சொல்லியிருக்கிறார்.

காயத்ரி மட்டுமல்லாது, மற்ற எந்த மந்த்ரமானாலும் ஜபம் செய்யும் விதம் பற்றிச் சொல்லுகையில், மூன்றுவிதமாகச் சொல்லுகிறார்கள்.

வாசிகம், உபாம்சு, மானஸம் என்பவை அந்த மூன்று விதங்கள். இவற்றில் வாசிகம் என்பது மந்த்ரத்தை வாய்விட்டு, பிறருக்குக் கேட்குமளவில் சொல்வது, சப்தமில்லாது, உதடுகளை அசைத்தவாறு சொல்வது உபாம்சு, உரக்கச் சொல்லாமல், உதடுகளும் அசையாது, மனதளவில் மந்த்ரத்தைச் சொல்லுவது மானஸம். இவற்றில் மானஸம் உத்தமம், உபாம்சு மத்யமம், வாசிகம் அதமம்.

வியாஸர் ஜப அனுஷ்ட்டானத்தினை விவரிக்கையில் காலையில் ஜபம் செய்கையில் இரு கைகளையும் மூக்கிற்கு நேராகவும், மாத்யான காலத்தில் ஹ்ருதயத்திற்கு நேராகவும், ஸாயங்காலத்தில் தொப்புளுக்கு நேராகவும் கைகள் இரண்டையும் வைத்துக் கொண்டு சோம்பலின்றி ஜபம் செய்ய வேண்டும் என்கிறார்.

ஆசாரம், மெளனம், நிலையான மனநிலை ஆகியவற்றுடன் மந்த்ரார்த்ததை நினைத்தவாறு ஜபம் செய்ய வேண்டும். ஜபம் செய்கையில் கனைத்தல், கொட்டாவி விடுதல், தூக்கம், சோம்பல், பசி, ஆகியவை கூடாது.

ஜபத்தின் மத்தியில் ஆசார்யரோ, அல்லது வேறு பாகவதோத்தமர்களோ வந்தால் ஜபத்தை நிறுத்தி அவர்களுக்கு பதிலளித்தல் அவசியம், அவர்களை வழியனுப்பிய பின்னர் ஜபத்தைத் தொடர வேண்டும்.

காயத்ரி வேதங்களின் தாய். பாவங்களைப் போக்குபவள்.

பூமியிலும் சொர்க்கத்திலும் காயத்ரி மந்திரத்தைவிடவும்
பரிசுத்தம் செய்யும் பொருள் வேறில்லை.

காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் மூன்று முறை ஜபித்தால் மங்களம் உண்டாகும்.நான்கு வேதங்களை ஓதியதன் பலன் கிடைக்கும்.

ஆரோக்கியம், பலம், அழகு, அறிவு, பிரம்மதேஜஸ் போன்றவை உண்டாகும். காயத்ரி ஜெபிப்பவர்க்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அஷ்டமாசித்திகளையும் தரும் என்பர் பெரியோர்.

காயத்ரி மந்திரம் சூரியனை பிரதான தெய்வமாகக் கொண்டது.

ஒவ்வொரு தெய்வத்தையும் முழுமுதலாகக் கொண்ட
காயத்ரி மந்திரங்களும் உண்டு.

விநாயகர் காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி
என எல்லா தெய்வங்களின் பேரிலும் காயத்ரி மந்திரம் உண்டு.
நவகிரகங்களுக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள காயத்ரி தேவி ஆலயங்களும் அவற்றின் சிறப்புக்களும்

சிதம்பரம் அருகேயுள்ள கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலுள்ள காயத்ரி தேவி ஆலயம் இரு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய மிகவும் அபூர்வமானதாகும்.

ஐந்து முகங்கள், பத்துக் கரங்களுடன் வெண்தாமரையில் வீற்றிருப்பது போன்ற எழிலான தோற்றத்தில் காயத்ரிதேவி காட்சி தருகிறாள்.

 பௌர்ணமிதோறும் கோவிலில் ஹோமம், அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம் நடக்கும்.  பிரார்த்தனை பலித்தவர்கள் அம்மனுக்கு ஆறு கஜம் புடவை சாற்றி அபிஷேகம் செய்கின்றனர்.

சேலம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தி லுள்ள காயத்ரி தேவியும் புதுமையான தோற்றம் உடையவள்தான். பஞ்சலோக மூர்த்தியான தேவி ஐந்து முகங்கள், மூன்று கண்கள், பத்துக் கரங்கள், மூன்று தனங்கள், மூன்று கால்களுடன் காட்சி தருகிறாள்.

திருப்பட்டூர் பிரம்மன் ஆலயத்திலும், சென்னையில் அரும்பாக்கம்
ஜெய் நகரிலும், இன்னும் தமிழ்நாட்டில் வேறு சில இடங் களிலும் காயத்ரிதேவி சந்நிதி அமைந்துள்ளது

அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை' என்கிறது ஒரு சுலோகம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு.

அனுதினமும் சந்த்யாவந்தனம், காயத்ரி ஜபம் செய்பவர்களுக்கும், குறிப்பாக  ஒவ்வொரு வருஷமும் லக்ஷ ஆவர்த்திக்கும் மேலாக காயத்ரி ஜபம் செய்யும் பெரியோர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக