செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோயில்..



அருள்மிகு திருக்குற்றாலநாதர் திருக்கோயில்..
______________________________________
*இறைவன்:*அருள்மிகு திருக்குற்றாலநாதர்.

*இறைவி:* அருள்தரும் குழல்வாய்மொழி.

*தீர்த்தம்:* சிவமதுகங்கை தீர்த்தம். (பேரருவி)

*தல விருட்சம்:* குறும்பலா மரம்.

*ஆகமம்:* மகுட ஆகமம்.

*சக்தி பீடம்:* தரணி பீடம், பராசக்தி பீடம்.
______________________________________
*தல அருமை:*
இன்றைய திருக்குற்றாலநாதர் திருக்கோயிலை மாமன்னன் இராசராசனால் வடிவமைக்கப்பட்டது.

முதல் சுற்று வீதி சுவர் அம்மன்னரால் கட்டப்பட்டதாகும்.

சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சுற்று வீதிக்குள் மூலவர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் பெருமாள் சன்னதி இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கருவறை அர்த்த மண்டபம் மகா மண்டபம் குழல்வாய்மொழி அம்மனுக்குத் தனிக்கோயில் பிள்ளையன் கட்டளை மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன.

நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பராசக்தி கோயில் கட்டப்பட்டுள்ளது.

குற்றாலநாதர் கோயிலுக்கான சுற்றுச்சுவர் சங்குவீதி மற்றும் உள்சுற்று வீதிகளில் பல புதிய சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன..

நாயக்கர் காலத்தில் அகத்தியர் என்னும் சிவனடியார் குற்றாலநாதர் சன்னதிக்கு இடப்பக்கமிருந்த பெருமாள் சன்னதியிலிருந்த பெருமாளை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.

அப்பெருமாள் சன்னதி இன்று வெஞ்சன அறையாகப் (சரக்கு அறை) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி மன்னர்களால் திரிகூட மண்டபம், பசுப்பிறை, தட்டொடி வைத்தியப்ப விலாசம், குழல்வாய்மொழி அம்மன் கோயில் முகப்பு மண்டபம், சங்குவீதி, மற்றும் வசந்த வீதியில் கல்பாவுதல் ஆகிய திருப்பணிகள் நடத்தப்பட்டன.

1925-ஆம் ஆண்டில் நகரத்தாரால் குழல்வாய்மொழியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

*வரலாற்றுச் சிறப்பு:*
சங்க இலக்கியங்களில் பொதிகைமலை பற்றிய செய்திகள் காணப்படுவதாலும் குற்றால நகர் சங்க கால நகரங்களில் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு ஆய் ஆண்டிரன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாலும் சோழமன்னன் கோச்செங்கண்ணனால் தல விருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதாலும் திருக்குற்றாலநாதர் கோயில் வழிபாடு சங்க காலத்தில் இருந்தது எனக் கருத முடிகிறது.

பல்லவர் காலத்தில் கபிலரால் எழுதப்பட்ட சிவ பெருமான் திருவந்தாதி என்னும் நூலில் “கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம் “கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று குற்றால நகரத்தின் பெருமையையும் குற்றாலநாதரின் சிறப்பையையும் வெளிப்படுவதால் அக்காலத்தில் குற்றாலமும் குற்றாலநாதர் கோயிலும் பெருமையுடன் விளங்கியிருத்தல் வேண்டும்.

*கல்வெட்டு சிறப்பு :*
திருக்குற்றாலநாதர் கோயிலில் மொத்தம் என்பத்தொம்பது கல்வெட்டுக்கள் வடிக்கப்பட்டுள்ளன.

சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.927-943) எழுதப்பட்ட பத்து கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

*“திருக்குற்றாலப் பெருமாள்”* என்று குற்றாலத்துறை ஆண்டவனை முதல் கல்வெட்டு கல்வெட்டு மட்டும் கூறுகிறது.

பின் எழுந்த கல்வெட்டுக்கள் *‘குற்றாலத்தேவன்’* *‘மாதேவன்’* என்று குறிக்கின்றது.

மேலும் இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களில் சூரிய கிரகண நாள் குறிக்கப்பட்டிருப்பதால் அதன் அடிப்படையில் அம்மன்னனின் ஆட்சிக் காலத்தை வரலாற்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.

கோயில் விளக்கெரிப்பதற்குத் தானமாகப் பசு கொடுத்தது போல பொன் பணம் ஆடு எருமை போன்றவற்றை வழங்கிய செய்திகளும் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

இம்மன்னன் காலத்துக் கல்வெட்டில் மட்டும் பெருமாள் என்ற பெயர் காணப்படுவதால் அக்காலத்தில் பெருமாள் சன்னதியும் சிவன் சன்னதியும் இருந்தன என்ற செய்தியை அறிய முடிகிறது.

*இலக்கிய சிறப்பு:*
பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கியமான தேவார பாடல்களில் மட்டுமே குற்றால நகரம் இறைவன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.

சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு.

அதிலும் திருஞான சம்பந்தர் திருக்குற்றாலநாதர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து இத்திருக்கோயிலின் தல விருட்சமான குறும்பலாவை பற்றி இரண்டாம் திருமுறையில் எழுபத்தி ஒன்றாம் பதிகமாக தனியாக ஒரு பதிகம் பாடியுள்ளார்.

தேவார பாடல்களில்தான் குற்றாலம் என்ற சொல்லாட்சி முதலில் காணப்படுகிறது.

சைவத் திருமுறைகளாகிய தேவாரம் திருவாசகம் திருக்கோவையார் சிவபெருமான் திருவந்தாதி பெரிய புராணம் ஆகியவற்றிலும் குற்றாலத்துறை கூத்தன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நாயக்கர் காலத்தில் பட்டினத்தார் அருணகிரிநாதர் போன்ற முனிவர்களும் குற்றாலத்து இறைவனைப் பற்றி பாடியுள்ளனர்.

திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மையின் பெருமைகள் அடிப்படையில் பதினான்கு சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.

*கோவில் அமைப்பு:*
ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் முதன்மை நுழைவாயில் கிழக்குப்பார்த்த வண்ணம் நோக்கி அமைந்திருக்க சிரம்மேல் கைஉயர்த்திக் குவித்து உள் புகுந்தோம்.

நுழைவு வாயிலின் முன்னர் இரண்டு பக்கமும் இரண்டு குறிஞ்சிக் கோபுரங்கள் இருந்தன. பார்த்து வணங்கி ரசித்து ருசித்தோம்.

நுழைவு வாயிலின் முன் மண்டபத்தின் கைப்பிடியாக இரண்டு கல் யானைகள் அமைந்திருக்க தொட்டு தீண்டிக் கொண்டோம்.

அடுத்து நூறு தூண்களைக் கொண்ட திரிகூட மண்டபமும் அமையப்பெற்றன. அத்தூண்களில்,  அற்புதமான அழகுகளை சேர்த்து வைத்திருந்தனர்.

அவ்வழகுகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து, இரண்டாவதாக ஒரு வரவேற்பு மண்டபமும் அமைந்திருந்தது.

இந்த மண்டபங்களோ, மரத்தூண்களால் செதுக்கப்பட்டு, அழகிய வேலைப்பாடுடன் அள்ளிக் கொண்டு நின்று காட்சி தந்தன.

இம்மண்டபத்தின் தென்புறத்திலே விநாயகர் இருக்க......"விடுவோமா? படீரென..காந்தியை பிடித்து தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.

இதனினும் வடபுறமாக ஆறுமுக நயினார் சந்நிதி இருக்கிறது, இவர் முன் நின்று பிரார்த்தனை செய்து கொண்டோம்.

ஏற்கனவே நம் மனதில் இருந்த இறுக்கம், ஆறுமுகநயினாரை வணங்கித் தொழுதபின், இறுக்கம் நீங்கப் பெற்று, நிம்மதியைச் சுமந்து கொண்டு நகர்ந்தோம்.

நுழைவு வாயிலை நாம் கடந்ததபோது,  நமஸ்கார மண்டபம் காட்சியான இடமருகே வந்து நின்றோம்.

அம்மண்டபத்தில் பலி பீடம் இருக்க, அதனருகாக நின்று, நம்மிடமிருந்த ஆணவமலம் ஒழிந்து போக, அப்பலிபீடத்திடம் வேண்டுதலை கூறிக் கொண்டோம்.

அடுத்து, கொடிமரத்து முன்பு விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.

கொடிமரத்தை அடுத்து நந்தியின் அருகாக வந்து நின்றோம். இவரை நாம் வணங்கிக்கொண்ட பின், ஆலயத்து ஈசனை உள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டிக் கொண்டு தொடர்ந்து நகர்ந்தோம்.

அப்படி நகர்ந்து வருகையில், வடபுறமாக  நாற்கால் சபாபதி மண்டபம் அமையப்பெற்றிருந்ததைக்தகண்டோம், கண்டு லயித்து ஆனந்தித்தோம்.

அடுத்து ஈசன் கோயில் திருச்சுற்று நுழைவு வாயிலின் மண்டபத்தில் முன் பகுதியில், நின்ற நிலையிலிருந்த விநாயகரையும் முருகனையும் வணங்கிக் கொண்டபின், மேலும் அங்கிருந்த துவாரபாலகர்களையும் வணங்கி உள்புக, அனுமதி விண்ணப்பம் வைத்துக் கொண்டு வரிசையில் நகர்ந்தோம்.

*வெளிச்சுற்று:*
வெளிச்சுற்று வீதியில் குறும்பலா நாதர், அறுபத்துமூவர் நாயன்மார்கள்,
நன்னகர பெருமாள்,
சைலப்பர்,
வல்லப விநாயகர்,
பாபநாசர்,
உலகம்மன்,
நெல்லையப்பர்,
காந்திமதியம்மன்,
மணக்கோலநாதர்,
நாறும்பூநாதர்,
சங்கரலிங்கநாதர்,
பால்வண்ணநாதர்,
ஒப்பனை அம்மன்,
சொக்கலிங்கர்,
மீனாட்சி,
சாஸ்தா மது நாதேஸ்வரர்,
அறம் வளர்த்த நாயகியம்மன்,
அகத்தியர்,
வாசுகி,
சோமலிங்கர்,
மகாலிங்கம்,
சகஸ்ரலிங்கம்,
காசிவிசுவநாதர்,
விசாலாட்சி,
சிவாலய முனிவர்,
பைரவர் ஆகியோர்
அமைந்து அருள்பாலிக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

திருக்குற்றாலம் சென்று இவ்வளவளவானவர்களை வழிபடுவோர், அனைத்து சிவாலயங்களையும் சென்று வழிபட்ட பெறும் பேறு பெறுவர்.

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில்  வாழ்ந்தும், விஜயநாராயணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் *திரிகூடராசப்பக் கவிராயர்* என்பவர்.

குற்றாலநாதரையும் குழல்வாய்மொழி அம்மையின் பெருமைகளை பதினான்கு சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளார்.

குறும்பலாக் கோவை அந்தாதி போன்ற இலக்கியங்களும் பக்தர்களால் படைக்கப்பட்டன.

*திருக்குற்றாலம்* என்றவுடன் *குற்றாலக் குறவஞ்சி* என்ற பெயரே இலக்கியவாதிகள் எண்ணத்தில் தோன்றும், அத்தகைய பெருமையுடைய இலக்கியத்தைப் படைத்தவர் *திரிகூடராசப்பக் கவிராயர்* எனும் திருக்குற்றாலநாதர் திருக்கோயில் சந்நிதி பிரபந்த வித்துவான் ஆவார்.

குறவஞ்சி மட்டுமல்ல...குற்றால நாதரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் முகமாக பல இலக்கியங்கள் படைக்கப்பட்டவராவார்.

*திரிகூடராசப்பக் கவிராயர் நூல்களாவன:*
01.திருக்குற்றாலத் தலபுராணம்.
02.திருக்குற்றாலக் குறவஞ்சி.
03.திருக்குற்றால மாலை.
04.திருக்குற்றால சிலேடை வெண்பா.
05.திருக்குற்றால யமக அந்தாதி.
06.திருக்குற்றாலநாதர் உலா.
07.திருக்குற்றால ஊடல்.
08.திருக்குற்றாலக் கோவை.
09.குழல்வாய்மொழி கோமள மாலை. (திருக்குற்றாலக் கோமள மாலை.)
10.குழல்வாய்மொழி கலிப்பாமாலை.
(திருக்குற்றாலக் குழல்வாய் மொழி மாலை.)
11.குழல்வாய்மொழி வெண்பா அந்தாதி.
(திருக்குற்றால வெண்பா அந்தாதி.)
12.குழல்வாய்மொழி பிள்ளைத் தமிழ்.
(திருக்குற்றாலத் பிள்ளைத்தமிழ்.)
13.நன்னகர் வெண்பா. (திருக்குற்றால நன்னகர் வெண்பா.) ஆகியனவை.

சைவத் திருமுறைகளில் ஒன்றான கபிலர் பாடிய, சிவபெருமான் திருவந்தாதியிலும் குற்றால நகரம், கூத்தர் பற்றின செய்திகள் இடம்பெறலாயின.

சோழர் காலத்தில் சேக்கிழாரால் எழுதப்பெற்ற பெரியபுராணத்தில், *குற்றாலத்துறையும் கூத்தனை* பற்றிய செய்திகளும் இடம்பெறலாயின.

*பெரும் சிறப்பு:*
இத்திருக்கோயில் பாண்டிய நாட்டில் உள்ள பதினான்கு சிவ தலங்களில் இத்தலம் மிகவும் தொன்மையானது.

சமயக்குறவர்களான நால்வர்கள் மற்றும் பட்டினத்தாராலும் பாடல் பெற்றவையாகும்.

குற்றாலம்- 'கு'  என்றால் பூமி அல்லது பிறவிப் பிணி எனவும்,  *தாலம்* என்றால் தீர்ப்பது எனவும் பொருள் கொண்டு பிறவிப் பிணியைத் தீர்க்கும் தலமாகையால்
*கு+காலம்=குத்தாலம்* குற்றாலம் எனப்பெயர் பெற்றது.

அறுபத்துநான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய பராசக்தி பீடம் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்கிற முத்தொழிலையும் நடத்தும் ஆதிசக்தியே இந்தத் தரணி பீடத் தேவியாவாள்!.

இங்கு ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

இச்சக்தி பீடத்தை, யோக பீடம்,தரணி பீடம், அருட்பராசக்தி பீடம் எனவும் அழைப்பர்.

*பூஜைகள்:*
திருவனந்தல் காலை 6.00 மணி,
உதயமார்த்தாண்டம் காலை 7.00 மணி,
விளாபூஜை -காலை 8.00 மணி,
சிறுகால சந்தி -காலை 9.00 மணி,
காலசந்தி -காலை 10.00 மணி,
உச்சிகாலம் -நண்பகல் 12.00 மணி,
சாயரட்சை -மாலை 6.00 மணி,
அர்த்தசாமம் - இரவு 8.00 மணி.

*தேர்கள்:*
இத்திருக்கோயிலுக்கு ஐந்து தேர்கள் உண்டு.
பிள்ளையாருக்கென ஒரு தேர்.
முருகப்பெருமானுக்காகவும் ஒரு தேர்.
ஆடவல்லான் நடராசப் பெருமானுக்காகவும் ஒரு தேர்.
அருள்மிகு சுவாமிக்கும் ஒரு தேர்.
அருள்தரும் அம்பாளுக்கும் ஒரு தேர்.

*சித்திரசபை:*
அருள்மிகு நடராஜப் பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றான *சித்திரசபை* இங்கு அமைந்திருக்கிறது.

திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலின் வடபகுதியில் சித்திரசபை அமைந்திருக்கிறது.

இதனின் மேற்கூரை முழுமையும் அழகிய செப்புத் தகட்டினால் வேயப்பட்டு, இதனின் உற்புறபகுதி முழுவதும் மூலிகையான வர்ணங்களைக் கொண்டு அழகிய ஓவியங்களாத் தீட்டியிருக்கின்றனர்.

இந்தச் சித்திரசபை பராக்கிரமப் பாண்டியணால் கட்டப்பட்டதாகும்.

*இருப்பிடம்:*
தென்காசி - செங்கோட்டை சாலையில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.

திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகிய ஊர்களிலிருந்து தென்காசி வரை இரயில் வசதி உள்ளது.

தமிழகத்திலிருந்து முக்கிய நகரங்களிலிருந்து குற்றாலத்தில் குழந்தை பேருந்து வசதிகள் இருக்கின்றன.

*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,
குற்றாலம்,
தென்காசி வட்டம்,
திருநெல்வேலி 627 802

*தொடர்புக்கு:*
04633 283138


நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *சித்திரசபை. குற்றாலம்.*

*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக