வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பிறவிப்பிணி போக்க செய்ய வேண்டியது என்ன?



பிறவிப்பிணி போக்க  செய்ய வேண்டியது என்ன?

நாம் ஒரு பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் எப்படி நம்மை  அடுத்த பிறவியில் வந்து சேரும்?  இறைவன் எப்படி நம்பிறவிப்பிணி் முந்தைய பாவங்களை போக்குவான்? இது மாதிரி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா?

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். எத்தனையோ பாவ புண்ணியங்கள் அனுபவித்து  முடிக்காமல் இருக்கின்றன. இந்த பாவ புண்ணியம் யாரைப் போய்  சேரும்? இதை யார் தீர்மானிப்பது?

இந்தப் பிறவியில் நல்லவர்களாக இருப்பவர்கள் துன்பப்படுவதும்,
தீயவர்களாக  இருப்பவர்கள்  பணம்,புகழ் , அதிகாரம் என்று இன்பமாக இருப்பதும்  முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்கள் மற்றும் புண்ணியங்களால் வருகிறது என்று கொண்டால்  அந்த பாவ புண்ணியங்கள்  எப்படி ஒருவரை வந்து அடைகின்றன?

உதாரணமாக நாம் ஒரு காரியம்  செய்தால்  அதற்கு ஒரு விளைவு உண்டாகும். அதில் சந்தேகம் இல்லை.  ஓடினால் மூச்சு வாங்கும், உப்பு தின்றால் தண்ணி தவிக்கும், கொழுப்பு நிறைந்த பொருள்களை உட்கொண்டால் உடல் பருமனாகும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருந்தே தீரும்.

இதை ஆழ்ந்து சிந்தித்த நம் பெரியவர்கள் கர்மா கொள்கை என்ற ஒன்றை முன் வைக்கிறார்கள். அது நாம் செய்யும் நல்லது கெட்டதுகள் நம்மை வந்து சேர்கின்றன.
நான் படித்தால் நீங்கள் மதிப்பெண் பெற மாட்டீர்கள். நான் உணவு உண்டால்  உங்கள் பசி தீராது. அவரவர்கள் செய்த வினை, அவர்களையே வந்து சேர்கிறது என்கிறார்கள்.

இதில் பெரும்பாலானவற்றை நாம் கண் முன்னால் காண முடியும். உழைத்தவன் முன்னுக்கு வருகிறான். சோம்பேறியாகத் திரிந்தவன் வெற்றி பெறுவது இல்லை.
ஆனால் சில சமயம் அயோக்கியர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள் இது ஏன்? ஒரு தவறும் செய்யாதவர்களுக்கு, நல்லதே நினைத்து நல்லதே செய்தவர்களுக்கு   சோதனை மேல் சோதனை  வருகிறது இது ஏன்? என்ற கேள்வி பிறந்து நாம் விடை தெரியாமல் தவிக்கிறோம்.

நல்லது / கெட்டது , பாவம் / புண்ணியம், அறம் /மறம் என்று ஒன்றே இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கர்மா கொள்கையை வகுத்த
பெரியவர்கள் சொல்கிறார்கள்...

எல்லா கர்மத்திற்கும்
உடனடி பலன் இருக்காது.

தீயில் விரலை வைத்தால் உடனே சுடும்.
உடற் பயிற்சி செய்யத் தொடங்கினால்
அதன் பலன் தெரிய சில பல காலம் ஆகும். நான் உடற் பயிற்சி செய்தேன், ஒரு மாற்றமும் இல்லையே என்று கேட்பதில்  அர்த்தம் இல்லை. விடாமல் செய்து கொண்டு வந்தால் பலன் தெரியும். சில சமயம், இந்த கர்மாவுக்கு கிடைக்கும் பலன் இந்த ஜன்மம் தாண்டி அடுத்த பிறப்பில் கூட வரலாம். இதை விளக்க, கர்மாவை மூன்றாகப் பிரித்தார்கள்.

சஞ்சித்த கர்மம் - இது நாம் முன்பு செய்த வினைகளின் தொகுதி. அனுபவிக்காமல் விட்ட வினையின் தொகுதி.

பிராரப்த கர்மம் - இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகள். இது இந்த பிறவியில் செய்ததாக இருக்கலாம், அல்லது சஞ்சித கர்மத்தில் இருந்து வருவதாக இருக்கலாம்.

ஆகாமிய கர்மம் - இந்தப் பிறவியில் கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்படும் விளைவுகள். இது சஞ்சித கர்மாவாக அடுத்த பிறவிக்குப் போகிறது.

சரி இப்படியே கர்ம வினைகள் தொடர்ந்து கொண்டே இருந்தால் இதற்கு ஒரு முடிவு தான் என்ன? மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா ?

பட்டினத்தார் ஒன்றும் வேண்டாம் என்று
துறவு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றார்.

பத்ரகிரி என்ற ஊரில் தங்கி இருந்த போது  ஒரு கள்ளன், அரண்மனையில் களவு செய்து விட்டு தப்பித்து ஓடும் போது  களவாண்ட நகைகளை பட்டினத்தார் இருந்த இடத்தில் மறைத்து வைத்து விட்டு ஓடி விட்டான். துரத்தி வந்த காவலர்கள் நகையை கண்டு கொண்டார்கள். பட்டினத்தார் தான் களவாடி இருக்க வேண்டும் என்று நினைத்து அரசனிடம் கூறினார்கள். அரசனும், பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் படி உத்தரவு போட்டான்.

பட்டினத்தார் சிந்தித்தார்...

இந்தப் பிறவியில் செய்த பாவம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்க, எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று யோசித்தார். ஒரு வேளை  முன் பிறவியில் செய்த வினைகள் தான் இப்போது இந்தத் துன்பமாக வந்து சேர்ந்ததோ என்று நினைக்கிறார்..

என் செயல் ஆவதி யாதொன்றும்
மில்லை இனித்தெய்வமே
உன் செயலே என்று உணரப்பெற்றேன்
இந்த ஊன் எடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் மில்லைப் பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோ
இங்ங னேவந்து மூண்டதுவே..!
என பாடுகிறார்.

முன் செய்த தீவினையோ இங்கனே
வந்து மூண்டதுவே என்று பாடினார்.

கழு மரம்  தீ பிடித்து எரிந்தது வேறு விஷயம்.

சரி, வினைகள் தொடர்கின்றன.

இந்த தொடரும் வினைகளை நாம் விதி என்கிறோம். இந்த தொடரும் வினைகளை அனுபவிக்கும் போது மீண்டும் ஏதோ ஒன்றை செய்கிறோம். அந்த செயலில் இருந்து பாவ புண்ணியங்கள் தோன்றுகின்றன.  அவற்றை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி. இப்படி பொய் கொண்டே இருந்தால்  இதற்கு எப்படி ஒரு முடிவு கொண்டு வருவது ?

அதற்கும் வழி இருக்கிறது...

மாணிக்க வாசகர் பாடுவார்.....
பழ வினைகள் தொலைந்து போகும்படி செய்து, என் மன அழுக்குகளை நீக்கி, என்னையே சிவமாகச் செய்த அவன் அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே என்று வியக்கிறார்.

முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப்
#பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக்
கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

ஈசனின் திருவடியை இறுக
பற்றிக் கொள்ளுங்கள். நம் பழம் வினைகளெல்லாம் நீர்த்து போகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக