ஞாயிறு, 23 ஜூலை, 2017

மன அமைதி தரும் ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில்...



மன அமைதி தரும் ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில்...


மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவூர் கிராமம். இக்கிராமத்தின் பெரிய ஏரிக்கரையின் அருகே சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் திருவகதீஸ்வரர் கோவில் உள்ளது.

சோழர் காலத்தில் (கி.பி.985-1014) திருமடப்பாறை உடையார் கோவில் எனவும், கி.பி. 1271-ல் ஆவூர் திருவகட்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் என்றும் அழைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். இதனை அங்குள்ள கோவில் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது.

*கோவில் அமைப்பு :*


இந்தக் கோவில் தெற்குப்புறமாக நுழைவு வாசல் கொண்டது. மதில் சுவர் 4 அடி கன அளவும், 34 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் திருவகதீஸ்வரர் சன்னிதி, லோகநாயகி அம்மன் சன்னிதி, விநாயகர் சன்னிதி, மடப்பள்ளி, திருக்கல்யாண மண்டபம் ஆகியவை உள்ளன. கோவில் கலை நயத்துடன் கல் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது.

*கோவிலின் சிறப்பும் காலமும் :*


இங்குள்ள கல்வெட்டு தகவல்கள் படியும், ஆய்வாளர் களின் கருத்துப்படியும் இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவாகிறது. கோவிலில் உள்ள கல்தூண்களில், குறிப்பாக திருக்கல்யாண மண்டபத்தின் கல்தூண்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், அப்போதிருந்த சிற்பக் கலையின் உன்னத நிலையை அறிய உதவுகிறது. இதில் நாயக்க மன்னர்களின் சிற்பங்களும் உண்டு. இதிலுள்ள 28 கல்வெட்டுகளில் ராஜராஜசோழன் கால கல்வெட்டு ஒன்றும், பாண்டிய அரசர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், பல்லவ மன்னர்கள் காலத்தை குறிக்கும் கல்வெட்டுகளும், ஹய்சாள மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர்கள் காலத்தை குறிக்கும் ஒரு கல்வெட்டும் உள்ளன.

15-ம் நூற்றாண்டில் மன்னர்கள் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆலயம் சிதிலமடைந்து போனது. தற்போது இந்த ஆலயத்தில் பூஜை நடை பெறாமல் உள்ளது.

மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு முன்பே இந்த ஆலயம் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தக்குளம் ‘மகாதேவ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் குளம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இந்தக்குளம் இதுவரை வற்றியது இல்லை.

மேலும் மனநோய் உள்ளவர்கள், வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள், தொழில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் மற்றும் மன அமைதியை தேடியவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கி சென்றால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.

அதேபோல் பவுர்ணமி நாட்களில் வேட்டவலம் ஸ்ரீஅகதீஸ்வரரை வணங்கிய பின்பு ஆவூரிலுள்ள திருவகதீஸ்வரரை வணங்கி விட்டுதான் திருவண்ணாமலைக்கு கிரிவலம் பக்தர்கள் செல்கிறார்கள்.


இந்த நிலையில் கடந்த 8-ம் ஆண்டுக்கு முன் பூமியில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட லிங்கத்தை எடுத்து கோவில் முன்பு பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன் அறநிலையத்துறை சார்பாக கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக