ஞாயிறு, 30 ஜூலை, 2017

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை



திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். "நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. விதி யாரை விட்டது. அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு மலைக்கு சென்றார்.

21 மாட்டு வண்டி

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். அந்த வண்டி அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை. ஓடி.. ஓடிப் பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரம் ஒன்று இருந்தது.

''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார். ஆறுமுக ஆசாரி. அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது.

கோடாலி வெட்டு

அந்த 21 தேவரைகளையும் விரட்டி விட்டு கொடி மரத்தினை வெட்ட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயா. மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. உடனே அந்த கோடாரி மற்றவர்களின் கழுத்தில் பட்டது. அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன் என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கிடையில் 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

சாஸ்தா

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். ‘முருகன்.. எனது  சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். பின் 21 மாட தேவதைகளையும் அந்த சந்தன மரத்தை வெட்டி திருச்செந்தூரில் கொண்டு சேர்க்க உத்தரவிட்டார்.

அதன்படி 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. இப்போதும் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவல் "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறினார். இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? கொடிமரம் பிரமாண்டமானது. அதை 21 மனிதர்கள் கொண்டு வர இயலாது. ஆனால் 21 மாட தேவதைகள் சேர்ந்து அந்த மரத்தினை 21 மாட்டு வண்டியில் தூக்கி வைத்து வரும் சம்பவம் ஒரு மலைப்பான சம்பவமாக இருந்தாலும் அதை நம்பி தீர வேண்டும்.

ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருக்காது. ஆனால் பொதிகை மலை சந்தனமரம், சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் திருச்செந்தூரில் கொடிமரமாக இருக்கும் செய்தி ஒரு வித்தியாசமான செய்தி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக