வெள்ளி, 14 ஜூலை, 2017

தருப்பைப் புல்லின் சிறப்புகள்



தருப்பைப் புல்லின் சிறப்புகள்

தருப்பையை "திருப்புல்" என்றும் கூறுவார்கள். திருப்புல் என்னும் சொல்லும் ," தூப்புல்" என்னும் சொல்லும் நாணல் இனத்தைச் சேர்ந்த ஒருவகைப் புல்லைக் குறிக்கும் சொல்லாகும். "தூப்புல்" என்பதற்கு "தூயபுல்" என்று பொருளாகும். இத்தகைய சிறந்த புல்லிற்கு இயல்பாக ஏற்பட்ட ஏற்றத்தை விட ஸ்ரீ இராமன் திருமேனி பட்டதால் மேலும் அதிக சிறப்பு வளர்ந்தது .

நம் முன்னோர்கள், மங்கலம் , அமங்கலம் ஆகிய இரு வகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் தருப்பை என்ற புல்லைச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். தருப்பை மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும். அக்னி போன்றது; உஷ்ண வீரியம் உடையது, அதிவேகமுடையது , நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது, உலோகங்களின் அழுக்கைப் போக்கக் கூடியது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உகந்ததாயும் அமைந்தது. புண்ய பூமியில் மட்டுமே முளைக்கக்கூடியது. "அக்னி கர்பம்" என்னும் வட நூல் ஒன்றில் தர்பையின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

கோயில் கும்பாபிஷேகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படும் தர்பை, வைதீகச் சடங்குகள் செய்யும் பொழுது " பவித்ரம்" என்ற பெயரில் தருப்பையை வலது கை மோதிர விரலில் , மோதிரம் போல அணிவார்கள். அந்த விரலில் கப நாடி ஓடுவதால் , தர்பையை அணியும் போது, கப நாடி சுத்தி பெரும். இப்புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதினால் தான் செப்பு முதலிய உலோகத்தினால் ஆன விக்கிரகங்களை இந்த தருப்பைப் புல்லின் சாம்பலால் தேய்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதனால் அவ்விக்கிரகங்கள் பல நாள் கெடாமல் இருக்குமாம். அவ்விக்கிரகங்களின் மந்திர ஆற்றலும் குறையாதாம்.

இந்தப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது . இதனை "அம்ருத வீரியம்" என்றும் சொல்வார்கள். இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும். இப்புல் பட்ட நீரைத் தெளித்த இடத்தில் தொற்று நோய்கள் தொற்றுவதில்லை. நீர்க்கரையில் உள்ள தருப்பைப் புல்லில் பட்டு, வீசும் காற்றினால் உடலின் நலன் பெருகும். மேலும் சூரிய கிரகணத்தின் போது தர்ப்பைக் கொண்டு உணவுப் பண்டங்களை மூடும் போது, சூரியனிடம் இருந்து கிளம்பும் வேண்டாத கிரகண ஒளிகள் அந்த உணவுப் பண்டங்களை பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக