வெள்ளி, 21 ஜூலை, 2017

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தோளில் அமர்ந்திருக்கும் கிளி உருவாகும் வரலாறு.



ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தோளில் அமர்ந்திருக்கும் கிளி உருவாகும் வரலாறு.

காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம்போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது! "இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள்தான் செய்யணும்.

இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித்தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்'நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை. ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழைநாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன். முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்தி கட்டிப்பேன். கிளி உருவத்துக்கு கொண்டு வந்ததும், மரவள்லிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச் சுத்தி கட்டுவேன். அந்த இலை ரொம்ப மெல்லிசா இருக்கும்.
 நல்லா பதிவாக வச்சுக் கட்ட வரும்.

கிளி உடல் நிறத்துக்குப் பொருத்தமாக தற்றுபமாக இருக்கும். கிளியோட உடல் முழுமை அடைஞ்சதும், கிளியின் மூக்கு மாதிரி வைப்பேன். செக்கச்செவேல்னு , அச்சு அசல் கிளிமூக்கு மாதிரியே இருக்கும். கண்ணுக்கு, 'காக்காப்பொன்'(மைக்கா) வைப்பேன். அதையும் கடைகள்ல வாங்கமாட்டேன். கிணறு வெட்டறபோது, வெளிய வர்ற கல்லு சில்லுகள்ல 'காக்காப்பொன்' கிடைக்கும். அதனால, கிணறு வெட்டும் இடங்க்ளுக்குப் போய், அதைத் தேடி எடுத்து சேகரித்து வெச்சுப்பேன். கிளியின் கண்ணுக்கு அதை வச்சு ஒட்டிவிட்டா, அப்படியே அச்சு அசல் கண் மாதிரியே இருக்கும்.

செயற்க்கைப்பொருளோ, கடையில் வாங்கிய பொருளோ எதுவுமே உபயோகிக்கிறதில்லை. தாயாருக்கு சாத்தறதாச்சே! அதனால, பசை, எச்சில்னு எதுவும் தொடக்கூடாது. லேசா தண்ணி தொட்டு ஒட்டிவிட்டாலே காக்காப்பொன் நல்லா ஒட்டிக்கும். பசை தேவையே இல்லை. அடுத்ததா, றெக்கை. அதுக்குப் பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரலி இலைகளை வச்சுக் கட்டுவோம். வாலுக்கும் அந்த இலைகளும், பனை ஓலையும்தான். இப்போ, கிளியோட முக்கால்வாசி வேலை முடிஞ்சிடும். கடைசியா கால் கட்டணும். சின்னதா ரெண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையா சீவி, காலுக்கு வச்சுக் கட்டிடுவோம்.

அதைக் குத்தி வைக்கிறதுக்கு, பூச்செண்டு செய்யணும். அதுக்கு நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி, அதுல மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியைக் குத்தி நிறுத்திட்டோம்னா, தயாருக்கான அன்றைய கிளி ரெடி!" எனபக்திப் பரவசம் பொங்க சொல்கிறார் ராமர். இனி ராமர் தரும் • பச்சைக் கிளியை • தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும்.

 அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும். முதல் நாள் மலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பிரசாதத்துடன் வைத்து கொடுக்கப்படுகிறது. ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்த கிளி.

 ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி மிகவும் சக்தி வாய்ந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கைகளை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக ஐதீகம். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தோளில் செல்லமாக, உரிமையோடு தொற்றிக் கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப்பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதும் ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக