புதன், 20 நவம்பர், 2019

பஞ்ச பூதங்கள். அவற்றின் சிறப்புகள்


பஞ்ச பூதங்கள். அவற்றின் சிறப்புகள்!

நாம் வாழும் இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் வாழ முடியாது. வேறு வகையில் சொன்னால் நம்மைப் படைத்த இறைவனே பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமாக விளங்குகின்றான். ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

*நிலம்:*


நாம் வாழும் பூமியாகிய இந்த நிலம் பொறுமைக்கு உதாரணமானது. கடப்பாரையால் குத்தித் தோண்டினாலும், இயந்திரங்களால் துளையிட்டாலும் எந்த சலனமும் இல்லாமல் அமைதியே வடிவாக விளங்குகிறது. அறியாமையினால் நாம் மண்ணை உயிரற்றது என்கிறோம். உயிரற்ற மண்ணிலிருந்து உயிருள்ள தாவரங்கள் தோன்றாது. பொறுமையின் இலக்கணமான இந்த பூமி மனிதனால் எவ்வளவு துன்புறுத்தித் தோண்டப் பட்டாலும் நமக்குத் தேவையான தண்ணீர், பலவகையான உலோகங்கள், கனிமங்களைத் தருகின்றது. நாம் உண்ணும் உணவை விளையச் செய்கிறது.


"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்

நாண நன்னயம் செய்துவிடல்"     



என்ற திருக்குறளுக்கு இலக்கணம் இந்த பூமியாகும். 

*நீர்:*

எந்த சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் இயல்பாகவே தானாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது. தண்ணீர் குளிர்ந்தால் பனிக்கட்டியாக மாறும். சூடானால் நீராவியாகும். ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் அதன் வடிவத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும். இதைத் தான் நெளிவு சுளிவு தெரிந்து நடந்து கொள்ளுதல் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஒருவர் அதிக துன்பப் படும் போதோ அல்லது ஆனந்தப் படும் போதோ கண்ணீர் வருகிறது. இது உணர்ச்சியின் அல்லது பாசத்தின் வெளிப்பாடு. தண்ணீர் கீழ் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது.  இது பணிவின் வெளிப்பாடு. ஆகவே தண்ணீர் பாசத்துக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று சொல்லலாம்.

"நீரின்றி அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான் நின்று அமையாது ஒழுக்கு"     



நீர் மற்றும் வானத்தின் பெருமைகளை ஒரே குறளில் வள்ளுவர் சிறப்பிக்கின்றார்.

*நெருப்பு:*

மேற்கண்ட இரண்டு பூதங்களிலிருந்து வேறுபட்டது. இந்த உலகில் உள்ள எந்தப் பொருளையும் எரித்து சாம்பலாக்கும் அல்லது தன்னுடையதாக ஆக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேல் நோக்கியே செல்லும் தன்மை கொண்டது. மனிதர்களுடைய பிரார்த்தனைகளை கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துச் செல்லும் சிறப்புத் தன்மை கொண்டது. இதனால் தான் இந்துமத வழக்கப்படி அக்னி சாட்சியாக திருமணம் செய்யப்படுகிறது. அந்தணர் சொல்லும் மந்திரங்களில் "அக்னி தேவனை வேண்டி இந்தத் திருமணச் செய்தியை இறைவனுடன் கொண்டுபோய் சேர்க்கச் சொல்லுகிறார். பிறகு இறைவனுடைய அருளைப் பெற்று வரச் சொல்லுகிறார். எனவே "நெருப்பு ஒரு தேவ தூதன்" என்று சொன்னால் மிகையாகாது. எளிமையாகச் சொல்வதாக இருந்தால் பிரார்த்தனையின்போது நெருப்பு ஒரு தபால் காரரின் வேலையைச் செய்கிறது. இதனால்தான் ஜாதகத்தில் குறையிருந்தால் கோயிலில் ஒரு குறிப்பிட்ட குறைபாட்டை நீக்க அது சம்பந்தப்பட்ட கிரகத்துக்கோ அல்லது தெய்வத்துக்கோ விளக்கு ஏற்றச் சொல்கிறார்கள். இதையே பெரிய அளவில் செய்வதாக இருந்தால் ஹோமம் என்று சொல்கிறோம். கிரகப் பிரவேசத்தின்போது கணபதி ஹோமம் செய்வது விநாயகரை வணங்கி அவருக்குத் தகவல் கொடுத்துவிட்டு நல்லபடியாக வாழத் தொடங்குகிறோம்.

*காற்று:*

தான் இல்லையென்றால் இந்தஉலகில் யாராலும் வாழ முடியாது என்று தெரிந்திருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இந்த உலகில் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. காற்று தன்னடக்கத்துக்கு உதாரணம். எல்லோரையும் இலவசமாகவே வாழவைக்கிறது. காற்றில் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனும், தாவரங்களுக்குத் தேவையான கார்பன் டை ஆக்சைடும் கலந்தே இருக்கும் சிறப்பு உயிரினங்களுக்கு காற்று வாழ்வதற்குத் தரும் ஒரு சிறந்த வாய்ப்பு அல்லது வரம்.

*ஆகாயம்:*

நாம் வாங்கும் தெய்வங்கள் வாழும் இடம் என்று நாம் நம்பும் ஒரு ஆகாய வெளி. இந்த உலகைப் படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைவிட பல சிறந்த தன்மைகளும் சக்திகளும் இருப்பதாலேயே உயர்ந்த தன்மை வாய்ந்த தெய்வங்கள் என்று நம்புகிறோம். அதனாலேய கடவுள்கள் மேல் உலகத்தில் இருக்கிறார்கள். ஒரு சாதாரண கிரைண்டர் சுற்றுவதற்கே மின்சக்தி தேவைப்படுகிறது; சுழல ஒரு அச்சு தேவைப்படுகிறது. அப்படி என்றால் அறுநூறு கோடி மக்களைக் கொண்ட இந்த பூமி இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சற்ற எவ்வளவு சக்தி தேவைப்படும்? இதற்கு அச்சு எங்கே? அதுவும் பூமி இருபது மூன்றரை டிகிரி சாய்ந்து கொண்டே சுற்றுகிறது. இது எப்படி சாத்தியம்? அந்தரத்தில் சுழலும் பூமியை ஆகாயத்தில் இருக்கும் சக்திகளே - தெய்வங்களே இயக்குகின்றன என்பதை அறிவுள்ள மனிதர்களால் புரிந்து கொள்ள முடியும்.

"வான் நோக்கி வாழும் உலகெலாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும்குடி" - 

 ஆகாயத்தின் பெருமையை  வள்ளுவர் விளக்கும் சிறப்பு. 


இதைத்தான்



"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி 

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் 

கோனாகி யான் எனது என்று அவர் அவரை கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே" 



என்று மாணிக்க வாசகர் சிவபெருமானை நினைத்துப் பாடினார். எனவே இறைவனே இந்த பஞ்ச பூதங்களைப் படைத்தது பஞ்ச பூதங்களாக விளங்கி நமை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும். அது மட்டுமின்றி பஞ்ச பூதங்களின் தன்மையால் மனிதன் எவ்வாறு விட்டுக் கொடுத்துப் பழகவேண்டும்; மற்றவர்களுக்கு உதவும் வகையில் வாழவேண்டும் என்றும் உணர்த்துகிறார்.



நிலத்துக்கு உரிய திருத்தலம் காஞ்சிபுரம் - இறைவன் ஏகாம்பரநாதர்.

நீருக்கு உரிய திருத்தலம் திருவானைக்கா - இறைவன் ஜம்புலிங்கேஸ்வரர். 

நெருப்புக்கு உரிய திருத்தலம் - திருவண்ணாமலை - இறைவன் அருணாச்சலீஸ்வரர்.

காற்றுக்கு உரிய திருத்தலம் ஸ்ரீகாள ஹஸ்தி - இறைவன் ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர்.

ஆகாயத்துக்கு உரிய திருத்தலம் - சிதம்பரம் இறைவன் நடராஜர். 


இத்திருத்தலங்களில்  சிவபெருமானை வணங்குங்கள். என்றும் இன்புற்று வாழ்த்திடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக